மக்கள் எப்படி வாக்களிக்க வேண்டும்? விஜய பிரபாகர் சொல்லிக்கொடுக்கும் ஐடியாவை பாருங்க
மதுரை: மக்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என சொல்லிக்கொடுத்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர்.
விருதுநகர் லோக்சபா தொகுதி, தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் இன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: நதிகளை இணைப்போம் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. நதிகளை இணைத்தாலே இந்தியாவில் பாதிப் பிரச்சினை தீர்ந்து விடும். விவசாயிகள் பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்து போய்விடும். அதனால் கண்டிப்பாக அதை வரவேற்க வேண்டும்.
கடைசி ஆயுதத்தை கையில் எடுத்த தமிழகத்தின் முக்கிய வேட்பாளர்கள்.. 'கதறும்' தேர்தல் களம்
ஸ்மார்ட் ஒர்க்
எதை வரவேற்க வேண்டுமா அதை வரவேற்க வேண்டும். எதை எதிர்க்க வேண்டுமோ அதை எதிர்க்க வேண்டும். எது வந்தாலும் எதிர்ப்போம் என்று கூறினால் நாம் அனைவரும் முட்டாள் ஆகிவிடுவோம். இவ்வளவு நாள் நாம் எல்லோரும் உழைத்து உழைத்து ஹார்ட்வொர்க் செய்து உள்ளோம். இனி இந்த தடவை நாம் எல்லோரும் ஸ்மார்ட் வொர்க் செய்ய வேண்டும். எனவே இந்த தேர்தலில் புத்தியை உபயோகித்து யோசித்து வேலை பார்த்தால் நம்முடைய வெற்றி வாய்ப்பு எளிதாக அமையும்.
எப்படி வாக்களிக்க வேண்டும்
எடப்பாடி பழனிசாமி ஆட்சியும், மோடி ஆட்சியும் அமைந்தால்தான் நல்லது நடக்கும். மோடி ஆட்சி அமைந்தால் மக்களுக்கு என்ன தேவையோ அதை சீக்கிரமாக கொண்டு வர முடியும். இந்த தேர்தலில் நீங்கள் உங்கள் தெரு பிரச்சனை, உங்கள் தொகுதி பிரச்சனை என்று பார்க்காமல், இந்தியா முழுவதும் என்ன பிரச்சனை இருக்கிறது என்று பார்த்து சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழகத்திற்கும் நல்லது நடக்கும். அதனால், மீண்டும் மோடி அலை வீசும்.
பாஜக பிரதமர் வேட்பாளர்
உங்களுக்கு யாரும் பொய்யான வாக்குறுதிகளை அளித்தாலும் அதை நீங்கள் நம்ப வேண்டாம். ஏன் என்றால் காங்கிரஸ் கட்சி, யார் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்காமலேயே பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது.
பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாமல் ஏன் ஓட்டு கேட்க வேண்டும். பிரதமர் வேட்பாளர் யார் என்று காங்கிரஸ் ஏன் இன்னும் அறிவிக்கவில்லை?
ஆனால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று பல மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றோம்.
பிரதமர் வேட்பாளர் யார்
அதனால் எந்தக் கூட்டணி வலுவான கூட்டணி என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் பிரச்சாரம் செய்வதால் அது ஒரு கண்துடைப்பு நாடகம் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய ஒவ்வொருவரின் ஓட்டும் வெறும் எண்ணிக்கை ஓட்டாக அமையக் கூடாது. அது வெற்றி ஓட்டாக அமைய வேண்டும். கருத்துக்கணிப்புகளை யாரும் நம்ப வேண்டாம். அது வெறும் கருத்து திணிப்புதான். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கடந்த பத்து வருடங்களாக கருத்துக்கணிப்புகளில் மட்டுமே வெற்றி பெற்றுவருகின்றன. இந்த கூட்டணி மக்களிடம் ஜெயிக்கவே இல்லை .அதனால் அதை நினைத்து யாரும் குழப்பமடைய வேண்டாம்.
வெற்றி நிச்சயம்
மேலும், இத்தனை ஆண்டு அரசியல் வாழ்க்கையில், கேப்டன் உங்களுக்கு எதுவும் துரோகம் செய்துள்ளாரா? இவ்வாறு மக்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார். அதற்கு மக்களே பதில் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தொண்டர்கள், "இல்லை" என்று பதில் அளித்தனர். அதனால் எந்த கூட்டணியில் கேப்டன் இருந்தாலும், அவர் என்றும் மக்களுக்காக குரல் கொடுப்பார் என்று கூறினார். அதனால் நீங்கள் தைரியமாக இந்த கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். பலரும் கட்சிக்காக கடுமையாக வேலை செய்து வருகின்றனர். அதனால் இந்த மெகா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். எனவே, இந்த தேர்தலில் உங்கள் வாக்குகளை கொட்டும் முரசு சின்னத்திற்கு வழங்க வேண்டும், என்று கேட்பது எங்கள் உரிமை. கொடுப்பது உங்கள் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.