"பத்திரமா வீட்டுக்கு போங்க.. நான் வீட்டுக்கு போன் பண்ணி கேப்பேன்".. பாசக்கார விஜயகாந்த்!
மதுரை மகளிர் தின விழாவில் விஜயகாந்த் உருக்கமாக பேசினார்
மதுரை: "என் மக்களுக்கு ஒன்னுன்னா இந்த விஜயகாந்த் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்.. நீங்க எல்லாரும் பத்திரமா வீட்டுக்கு போகணும்.. நான் போன் பண்ணி கேட்பேன்" என்று விஜயகாந்த் பேசியதை கேட்டு மதுரை மாவட்ட மக்கள் கண் கலங்கிவிட்டனர்!
Recommended Video
மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றத்தில் தேமுதிக சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
மதுரைக்கும் விஜயகாந்த்துக்கும் எப்போதுமே ஒரு நெக்கம் உண்டு.
அதேபோல மதுரை மாவட்ட மக்களும் விஜயகாந்த் மேல் இன்றுவரை பாசத்தை பொழிந்து வருகின்றனர். விஜயகாந்த்துக்கு எப்போது உடம்பு சரியில்லை என்றாலும், முதலில் கோயிலுக்கு போய் அவருக்காக வேண்டி கொள்வது இந்த மாவட்ட மக்கள்தான்!
அபூர்வம்
நேற்றும்கூட மகளிர் தின விழாவுக்கு விஜயகாந்த் வந்திருந்தார்.. இப்போதெல்லாம் அவரை பார்ப்பதே அரிதாகி விட்டது.. அப்படியே பார்த்தாலும் பேசுவதை கேட்பதும் அபூர்வமாகிவிட்டது. விஜயகாந்த் வருகிறார் என்பதற்காகவே மக்கள் கூட்டம் நேற்று அலைமோதி வந்தது... மேடையில் முதல் வரிசையில் விஜயகாந்த், பக்கத்தில் பிரேமலதா, எல்கே சுதீஷ், விஜயபிரபாகரன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருமே உட்கார்ந்திருந்தனர்.
சுதீஷ்
வழக்கமாக பிரேமலதா பேசுவதை பிரச்சாரங்களில் கேட்டிருக்கிறோம்.. அதேபோல விஜயபிரபாகரன் சீறுவதையும் பார்த்திருக்கிறோம்.. ஆனால் நேற்று சுதீஷ்தான் கலக்கிவிட்டார்.. அப்படி ஒரு ஆவேச பேச்சு..- சுதீஷூக்கு இப்படி பேச வருமா என்று நேற்றுதான் தெரியவந்தது.. அவரது மொத்த குறியும் மு.க. ஸ்டாலின்தான்.. !
ஒயிட் & ஒயிட்
இந்த கூட்டத்தில் வந்திருந்த பொதுமக்கள் விஜயகாந்த்தையே பார்த்து கொண்டிருந்தனர்... ஒயிட் & ஒயிட் டிரஸ்.. அதே கூலிங்கிளாஸ்.. அதே பளிச் விபூதி என ஸ்மார்ட் லுக்குடன் காணப்பட்டார் விஜயகாந்த்.. அவர் எப்போது பேசுவார் என்ற ஆவலும் எழுந்தபடியே இருந்தது.. அதன்படியே மைக் அவரிடம் தரப்பட்டது.. விஜயகாந்த பேசியதாவது:
பத்திரமா போகணும்
"உட்கார்ந்தே பேச சொல்றாங்க என்னை.. அதான் உட்கார்ந்தே பேசறேன்.. இங்கு அமர்ந்திருக்கும் அன்பு சகோதர, சகோதரிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.. என் மக்களுக்கு ஒன்னுன்னா விஜயகாந்த் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்.. பத்திரமா வீட்டுக்கு போய் சேரணும்.. ஆமா பத்திரமா போய் சேரணும்.. நான் போன் பண்ணி கேப்பேன்.. எல்லாரும் பத்திரமா வீட்டுக்கு போணும்.." என்றார்.
கண்கலங்கினர்
விஜயகாந்த் இப்படி சொன்னதும் ஒட்டுமொத்த கூட்டமும் கைதட்டி ஆரவாரம் செய்தது.. ஆனால் அவர் பேசியது எதுவுமே சரியாக புரியவில்லை.. ரொம்பவும் சிரமப்பட்டுதான் இந்த வார்த்தைகளையும் சொன்னார்.. தட்டுத்தடுமாறி விஜயகாந்த்தை பேசுவதை கேட்டு மக்களில் சிலர் கண்கலங்கினர்.. எப்படி எப்படியோ பேசி பார்த்த விஜயகாந்த்தை, இப்படி பேசுவதை பார்க்கும்போது சிலரால் தாங்கி கொள்ள முடியவில்லை.
பாசம்
"என் மக்களுக்கு ஒன்னுன்னா பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன் என்றும், பத்திரமா வீட்டுக்கு போகணும்" என்று விஜயகாந்த் பேசிய இந்த வரிகள் மட்டும்தான் அவர்களுக்கு பெருத்த ஆறுதலாக இருந்தது.. வழக்கமாக எந்த கூட்டத்திலும் பேசினாலும் விஜயகாந்த் இந்த வார்த்தைகளை மறக்காமல் சொல்வார்.. அது அவருக்கு இயல்பாகவே வந்துவிடும்.. அரசியலையும் தாண்டி விஜயகாந்த் அனைவராலும் விரும்பப்படுவதற்கு காரணமும் இதுதான்... இந்த பாசம்தான்!