மோடியை வீழ்த்துவது மட்டும்தான் நோக்கம்.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் ஸ்டாலின் உறுதி!
தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் சேர்ந்து பிரதமர் மோடியை வீழ்த்துவதற்கு உறுதியெடுத்துக்கொண்டு பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மதுரை: தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் சேர்ந்து பிரதமர் மோடியை வீழ்த்துவதற்கு உறுதியெடுத்துக்கொண்டு பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு என்று மதுரையில் நடைபெற்றது. எல்லா வருடமும் இந்த மாநாட்டில் திமுக கட்சி சிறப்பு அழைப்பின் பெயரில் கலந்து கொள்ளும். அதன்படி நேற்று மதுரையில் நடந்த மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அவையில் இருந்த முக்கிய தலைவர்கள் எல்லோருக்கும் வாழ்த்து தெரிவித்து ஸ்டாலின் தனது உரையை தொடங்கினார். சுமார் 20 நிமிடங்கள் ஸ்டாலின் இதில் உரையாற்றினார்.
மகிழ்ச்சி
ஸ்டாலின் தனது பேச்சில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினுடைய மாநில மாநாட்டில் பங்கேற்பதில் நான் பெருமைப்படுகின்றேன், மகிழ்ச்சியடைகின்றேன், புலங்காகித உணர்வோடு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கின்றேன். மாநாட்டிற்கு நீங்கள் வந்தாக வேண்டும் என்று உரிமையோடு அழைத்தார்கள். அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் உரிமையோடு, கடமை உணர்வோடு பங்கேற்க வந்திருக்கின்றேன்.
மகன்
நான் எண்ணிப் பார்க்கின்றேன். தலைவர் கலைஞர் அவர்களை இதுபோன்ற மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறபோதெல்லாம் தலைவர் கலைஞர் அவர்கள் தட்டாமல் பங்கேற்பதை வழக்கமாக வைத்திருந்தார். அதே வழியில் தலைவர் கலைஞரின் மகனான நானும் தட்டாமல் தந்தை வழியில் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளேன். பேராசிரியர் அவர்கள் எடுத்துச் சொன்னதைப் போல, அத்தகைய பாசமும், பற்றும், நல்லுறவும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும் எப்போதும் உண்டு.
சிறுபான்மை
இந்த நட்பை யாராலும் பிரித்திட முடியாது. சிலர் அரசியலுக்காக, ஏன் தேர்தலுக்காக இஸ்லாமியர்களை நண்பர்களாகக் காட்டிக் கொள்வார்கள். சிறுபான்மையினரின் நண்பர்களைப் போல நடிப்பார்கள். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் அப்படியல்ல. காரணம், சிறுபான்மையினர்க்கும் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கும் திராவிட இயக்கத்துக்குமான நட்பு என்பது இந்த இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறது.
எப்போதும் இருக்கும்
இன்று வரை தொடர்கிறது. அது தொடர்ந்து தொடரத்தான் போகிறது. இந்த நட்பு அன்பால் ஆனது. அரசியலால் ஆனது அல்ல. தேர்தல்கள் வரும், போகும். ஏன் அந்த தேர்தல்களில் வெற்றிகள் வரும் போகும். ஆனால், மாறாமல் இருப்பது மனிதாபிமானம். மாறிவிடக்கூடாதது மனிதாபிமானம்."கடவுளை மற" என்று சொன்ன தந்தைப் பெரியார் அவர்கள், அடுத்த வார்த்தையாக அவர் சொன்னது "மனிதனை நினை" என்பதே.
இந்தியாவின் முழக்கம்
மனிதனை நினைத்துத் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் திராவிட இயக்கம் என்பதை எல்லோரும் நன்றாக அறிவார்கள். இந்த மாநாட்டின் முழக்கமாக, ‘இதயங்களை இணைப்போம், இந்தியாவை மீட்போம்' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது இந்திய யூனியன் முஸ்லீக் லீக் கட்சியின் முழக்கமாக மட்டுமல்ல, அதுதான் இன்றைக்கு இந்தியாவின் முழக்கமாகவும் இருந்து கொண்டிருக்கிறது.
முடியாது
இந்த நாட்டு மக்களின் இதயங்களைப் பிரிப்பதன் மூலமாக இந்த நாட்டைப் பிரிக்கும் காரியத்தைச் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களை தேச பக்தர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அதைவிட ஆபத்தானது அவர்கள் இந்த நாட்டின் ஆட்சியையே கைப்பற்றி விட்டார்கள். அதுதான் மிகப்பெரிய ஆபத்து. சில நாட்களுக்கு முன்னால் நம்முடைய தொல். திருமாவளவன் அவர்கள் திருச்சியில் ஒரு மாநாட்டை கூட்டினார்கள். அதில் பங்கேற்று பேசும்போது நான் சொன்னேன்.
மோடி ஆட்சி
அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அமைப்புகளின் அதிகாரங்களையும் பறித்து அதனைச் சிதைப்பது தான் மோடியின் வேலையாக இருந்து கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றமா? நீதிபதிகளே மிரள்கிறார்கள். ரிசர்வ் வங்கியா? கவர்னர்களே ஓடுகிறார்கள். சி.பி.ஐயா? அலுவலகத்தையே பூட்டுகிறார்கள். மக்கள் கண்காணிப்பு ஆணையமா? செயல்படக்கூடாது என்கிறார்கள். தகவல் ஆணையமா? எந்தத் தகவலும் தரக்கூடாது என மிரட்டப்படுகிறார்கள். தேர்தல் ஆணையமா? தேர்தலையே நடத்தக்கூடாது என மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இவரை போல இல்லை
இப்படி ஒரு பிரதமரை இந்தியா இதுவரை பார்த்தது இல்லை, இனியும் எவ்வளவு காலத்துக்கு பார்த்துக்கொண்டு இருப்பது என்பதற்காகத்தான் அகில இந்தியா முழுவதும் தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் சேர்ந்து மோடியை வீழ்த்துவதற்கு உறுதியெடுத்துக்கொண்டு அந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினரான நீங்கள் மட்டுமல்ல அனைத்து மக்களும் மோடி அரசால் பாதிக்கப்பட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள், என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.