ஆதங்கத்தில் அழகிரி.. மீண்டும் அதிரடியை காட்டுவாரா.. காத்திருக்கும் அஞ்சாநெஞ்சனின் தொண்டர்கள்
Recommended Video
மதுரை: திமுகவில் இருந்து நீக்கப்பட்டு வருடங்கள் பல உருண்டோடிவிட்ட நிலையில் அழகிரி தனது அரசியல் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரையின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றை போல் பார்க்கப்படும் முக அழகிரியின பிறந்த நாள் இன்று மிகவும் எளிமையாக மாறி உள்ளது. எங்க அண்ணன் எங்க அண்ணன் அள்ளி தெளிக்கிறதில் மன்னன், பாசத்தில் அடித்துக்கொள்ள ஊரில் அவரை போல் கிடையாது என்று முக அழகிரியின் பிறந்த நாளில் மதுரை முழுவதும் போஸ்டர்களும் பேனர்களும் களை கட்டும்.
மதுரையே குழுங்கும் அளவுக்கு நலத்திட்ட உதவிகள், கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் களைகட்டும். திரும்பிய பக்கம் எல்லாம் காதை கிழிக்கும் வகையில் ஸ்பீக்கர்களால் பாடல்களும் ஒளிபரப்பாகும். மதுரையே குழுங்கும் அளவுக்கு சாரட் வண்டியில் ஊர்வலம் வருவார். அப்போது தி.மு.கவின் தென் மண்டலப் பொறுப்பாளராகவும், மத்திய அமைச்சராகவும் அழகிரி இருந்தார். அழகிரியின் செல்வாக்கு என்பது 2006 முதல் 2014 வரை மிகப்பெரியது. தென் மாவட்டங்களை அழகிரி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
பொறுப்பிலும் இல்லை
இப்போது அப்படியில்லை அழகிரி மத்திய அமைச்சராகவும் இல்லை. திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இதனால் அவரை சுற்றியிருந்தவர்கள் பலர் அவரை விட்டு விலகினர். இப்போது அழகிரியின் பிறந்த நாள் கொண்டாட்டமும் குதூகலமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து மக்களே மறக்கும் அளவுக்கு மாறியது.
போஸ்டர்கள் மட்டுமே
கடந்த ஆண்டு கருணாநிதி மரணம் காரணமாக அழகிரி பிறத் நாளை கொண்டாடவில்லை. இந்த ஆண்டும் கொண்டாடவில்லை. இதனால் மதுரை நகரில் அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டம் சுத்தமாக இல்லை. எனினும் அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் மதுரை முழுவதும் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டர்களில் அழகிரிக்கு எதாவது மாற்றம் நிகழ வேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்தி உள்ளார்கள். பிறந்தநாளன்று யாரும் வீட்டுக்கு வர வேண்டாம்' என்று அழகிரி கூறிவிட்டதால் ஆதரவாளர்கள் யாரும் செல்லவில்லை.
மறப்பது சாதாரணம்
இந்நிலையில் தனது பிறந்த நாளான இன்று முக அழகிரி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஏதேனும் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மதுரையில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன்குமார் இல்ல திருமண விழாவில் இன்று பங்கேற்றார். இந்த விழாவில் அழகிரி பேசுகையில் "மறப்பது என்பது இப்போது சாதாரண விஷயமாகிடுச்சு. அதற்கு நானே எடுத்துக்காட்டு. அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ, எம்.பி-க்களோ எனக்கு வணக்கம் சொல்லிவிட்டுப் பேசுறாங்க
பேசமாட்டுறாங்க
ஆனால், என்கூடப் பழகியவங்க.. எல்லாம் இப்போது என்னிடம் பேசுவதைத் தவிர்த்து வருகிறார்கள்.. இந்த நிலைமையெல்லாம் எப்போது மாறப்போகுதுன்னு *தெரியவில்லை. மாறினால் அவ்வளவுதான். என்னைப் பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும். நினைத்ததைச் சாதிப்பேன், நினைத்ததை முடிப்பேன். மற்றவர்கள் மட்டும்தான் கலைஞரின் பிள்ளை அல்ல; நானும் கலைஞரின் பிள்ளைதான். அதை நினைவில் வைச்சுக்கங்க என்றார்.
திமுகவில் இணைவாரா
அழகிரியின் இந்தபேச்சு மூலம் தன்னை சுற்றி அதிகாரம் இருந்தவர்கள் யாருமே தன்னிடம் பேசுவதில்லை என்ற ஆதங்கம் இருப்பது தெரிகிறது. அவர் சொல்வது போலவே எப்போது இந்த நிலை மாறும் என்பது தெரியவில்லை. அவர் மீண்டும் திமுகவில் இணைவாரா அல்லது புதிய அரசியல் பிரவேசம் குறித்து திட்டம் வைத்துள்ளாரா என்பதை இதுவரை பொதுவெளியில் வெளிப்படுத்தியது இல்லை. அவரது தம்பி ஸ்டாலின் உடனான சண்டையால் திமுகவில் இருந்து அவர் விலகியிருந்தாலும், விரைவில் அவர் திமுகவில் இணைவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை வெளிப்படுத்துகிறார்கள். அவரது அரசியல் பிரவேசத்திற்காக அவரது தொண்டர்கள் ஆர்வமுடன் உள்ளார்கள். ஆனால் உண்மையில் அழகிரி திமுகவில் இணைய விரும்புகிறாரா அல்லது வேறு என்ன செய்யப்போகிறார் என்பதை அவரே கூறினால் மட்டுமே தெரியவரும்.