எப்போது வந்தாலும் கருப்பு கொடி தான்... மோடிக்கு எதிராக வைகோ கொந்தளிப்பு
Recommended Video
மதுரை: தமிழகத்திற்கு மோடி எப்போது வந்தாலும் என் தலைமையில் கருப்பு கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: தமிழகத்திற்கு சுதந்திரம் அடைந்த நாள் முதல் தற்போது வரை எந்த ஆட்சியிலும் நடக்காத கொடுமையான துரோகங்கள் நரேந்திர மோடி ஆட்சியில் நடைபெற்று வருகிறது என்றார்.
மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல், கொங்கு மாவட்டங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்களை வைத்து விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை அழிக்க பார்க்கிறார்கள். கஜா புயல் பாதிப்புக்கு சரியான நிதியினை கேட்டு பெறாத அரசு தான் முதுகெலும்பு இல்லாத அதிமுக அரசு.
மகாத்மா காந்தி உருவத்தை கீழே போட்டு மிதித்து உள்ளனர். அவர்களை தட்டிக் கேட்காதவர் இந்த மோடி. மதவாத சக்திகளால் ஒரு பாசிஸ்டாக மோடி உருவாகி வருகிறார். பாஜக கட்சிக்கு மோடி ஓட்டுக் கேட்பதை கண்டிக்கவில்லை பொதுக்கூட்டம் நடத்துவதை கண்டிக்கவில்லை.
தமிழகத்திற்கு அவர் செய்த கணிக்க முடியாத பல துரோகங்களை கண்டித்து, கருப்புக் கொடி என் தலைமையில் காட்டப்படும். இன்று மட்டுமல்ல என்றும் தமிழகத்திற்கு அரசு விழாவிற்காக எப்போது மோடி வந்தாலும் என் தலைமையில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று தெரிவித்தார்.