"லீக் ஆன சீக்ரெட் ".. வீட்டிற்கே போய் "அவரை" சந்தித்தாராமே ஓபிஎஸ்.. பற்ற வைத்த மாஜி.. குஷியில் திமுக
எடப்பாடி பழனிசாமி தன் கொள்கையில் உறுதியாக இருப்பதாக உதயகுமார் சொல்கிறார்
மதுரை: "எடுத்த முடிவில் எடப்பாடி பழனிசாமி இன்றுவரை உறுதியாக இருக்கிறார்.. ஆனால், ஓபிஎஸ் அப்படி இல்லை.. திமுகவை எதிர்க்க அவர் தயாரில்லை" என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார்.
Recommended Video
3 லோக்சபா, 7 சட்டசபை இடைத்தேர்தல்- திரிபுராவில் முதல்வர் மாணிக் சஹா அமோக வெற்றி
கடந்த 23-ந் தேதி அதிமுகவில் ஏற்பட்ட ரணகள சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை.. குழப்பங்களும் தீரவில்லை.. வெறும் 30 நிமிடத்தில் அந்த பொதுக்குழு நடந்து முடிந்த ஆச்சரியமும் இன்னும் நீங்கவில்லை..
ஒற்றை தலைமை விவகாரத்துக்கும் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை.. இதனிடையே ஓபிஎஸ் டெல்லிக்கு பறந்தார்.. எதற்காக என்று இதுவரை தெரியவில்லை என்றாலும், நேற்று மாலையே சென்னை திரும்பிவிட்டார்.
எடப்பாடி பிளான்
இப்போதைய சூழலில், கட்சியின் பெரும்பாலான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே கிடைத்துள்ளதாக தெரிகிறது.. ஏராளமான மா.செ.க்கள், மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் சாய்ந்துள்ளனர்.. இதுவரை மைத்ரேயன் ஓபிஎஸ் ஆதரவாளராக பார்க்கப்பட்ட நிலையில், அவரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்ததெல்லாம், மிகப்பெரிய ட்விஸ்ட்டாக கருதப்படுகிறது.. ஆரம்பத்தில் கொங்கு மண்டலத்தில் மட்டுமே தனக்கான ஆதரவை சம்பாதித்து வைத்திருந்த எடப்பாடி, நாளடைவில், தென் மண்டலங்களிலும் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்டி உள்ளதும், அங்குள்ள பெரும்பாலான ஓபிஎஸ் ஆதரவாளர்களும் எடப்பாடி பக்கம் தாவி உள்ளதும், பரபரப்பை மேலும் கூட்டி வருகிறது.
ரவீந்திரநாத்
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், ஓபிஎஸ் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியுள்ளார்.. அவர் பேசும்போது சொன்னதாவது: "திமுகவை எதிர்ப்பது தான் அதிமுகவின் பிரதான கொள்கையே.. ஆனால் சட்டமன்றத்தில் கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி பட டயலாக் பற்றி ஓபிஎஸ் பேசுகிறார்.. பிறகு, ஓபிஎஸ் மகன் ரவிந்திர நாத் குமார், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார்.. திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று சொல்கிறார்.
பஞ்சாயத்து
இதனால் அதிமுக தொண்டர்கள் மன தளர்வு ஏற்படும் நிலை உருவாகும்.. அதனால், திமுகவை மன உறுதியோடு எதிர்க்கும் தலைமை தான் தற்போது வேண்டும்.. ஓபிஎஸ் தர்மயுத்தத்தின்போது 3 கோரிக்கைகளை முன்வைத்தார்... அதில் சசிகலா குடும்பத்தை கட்சியில் இணைக்க கூடாது என்று கேட்டுக்கொண்டார். இது போன்ற பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டதே ஓபிஎஸ்தான்.. அன்று தொடங்கிய பஞ்சாயத்துதான் இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது..
ரகசிய பேச்சு
ஆனால் டிடிவி தினகரனோடு மட்டும் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்... அவரது வீட்டிற்கு சென்று பேசுகிறார்... எதற்காக இந்த ரகசிய சந்திப்பு? யாரை வீழ்த்த இந்த சந்திப்பு? எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டாமா? முடிவை மாற்றி மாற்றி எடுக்கும் தலைமை எங்களுக்கு வேண்டாம்... அன்னைக்கு என்ன சொன்னார், பேச்சுவார்த்தைக்கு தயார் என்றார்.. ஆனால் மூத்த தலைவர்கள் சென்றால், அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்.. பொதுக்குழுவிற்கு அழைப்பு விடுத்துவிட்டு, அந்த தலைவரே கோர்ட், போலீசுக்கு சென்று பொதுக்குழுவை தடுத்து நிறுத்துங்கள் என்று சொன்ன வரலாறு அதிமுகவில் இதுவரை கிடையாது..
லிஸ்ட் வெளியானது
பொதுக்குழுவை தடுத்து நிறுத்த எடுத்த முயற்சி தோல்வி எல்லாம் அவருக்கு அடைந்துவிட்டது.. பிறகு மறுபடியும் அந்த பொதுக்குழுவிற்கே வருகிறார்... அப்படியே அவர் வந்தாலும், நாங்கள் எல்லாம் மேடையில் பேசியபோது அண்ணன் என்று தான் சொல்லி அவரை வரவேற்றோம். திமுகவிற்கு எதிரான குஸ்தி சண்டையில் எடப்பாடி பழனிசாமி மட்டும் தயாராக உள்ளார்... ஆனால் ஓபிஎஸ் அதற்கு தயாராக இல்லை.. இரட்டை தலைமை விவகாரத்தால் முடிவு எடுப்பதில் கால தாமதம் ஆகிறது.
கண்ணீர்
ராஜ்யசபா வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் கட்சி கூட முடிவு அறிவித்துவிட்டது... ஆனால் அதிமுகவில், இரட்டைத் தலைமையால் புரிதல் குழப்பம் ஏற்பட்டு தேர்தலில் கடைசியாகத்தான் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர். ஒற்றை தலைமைக்கு ஆதரவளித்தால், ஓபிஎஸ் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.. ஜெயலலிதா மறைவுக்குபின் கண்ணீரில் தவித்தவர்களுக்கு மக்கள் மனதில் நம்பிக்கை விதைத்ததே எடப்பாடி பழனிசாமிதான். கட்சிக்காக முடிவு எடுப்பதில் எடப்பாடி பழனிசாமி எந்த முடிவில் இருந்தும் பின் வாங்கியதில்லை, ஆனால், ஓபிஎஸ் எதிலுமே உறுதியாக இருந்தது கிடையாது" என்றார் உதயகுமார்.
கருணாநிதி
உதயகுமார் சொல்லி உள்ள இந்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே, அதிமுகவில் பெரும்பாலான நிர்வாகிகள் சொல்லும் குற்றச்சாட்டுகள்தானாம்.. காரணம், ஆரம்பத்தில் ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கியபோது, ஓபிஎஸ்ஸுக்கு இந்த அளவுக்கு எதிர்ப்பு இல்லையாம்.. சட்டமன்றத்தில் கருணாநிதியை புகழ்ந்தபோதுகூட, அது ஒரு அரசியல் நாகரீகமாகவே பார்க்கப்பட்டது.. ஒட்டுமொத்த அதிமுக சார்பில், ஓபிஎஸ் இவ்வாறு கருணாநிதி பற்றி புகழாரம் சூட்டியதாக பார்க்கப்பட்டது. மேலும் அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி, சட்டசபைக்கும் செல்லவில்லை.. அதனால்தான், அவர் சார்பாக ஓபிஎஸ் பேசுகிறார் என்று நினைத்தனர்.
ரவீந்திரநாத்
ஆனால், ஓபிஎஸ் மகன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததுதான் ஒட்டுமொத்த அதிமுகவுக்கும் ஷாக் ஆகிவிட்டதாம்.. திமுகவை வழக்கமாக எதிர்ப்பது அதிமுகதான்.. திமுகவுக்கு மாற்றும் அதிமுகதான்.. திமுகவை எதிர்த்துதான் அரசியல் செய்யப்பட்டு வருகிறது.. அப்படி இருக்கும்போது, ஆளும் கட்சியையே, வாய் நிறைய பாராட்டிவிட்டு வந்தால் என்ன அர்த்தம்? யார்தான் திமுகவுக்கு எதிரிக்கட்சி? என்ற அதிர்ச்சிகள் எழுந்திருக்கின்றன.. இதற்கு பிறகுதான், ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள்கூட, எடப்பாடி பக்கம் சாய முடிவு செய்தார்களாம்.. ஒருபக்கம் பாஜகவுடன் நெருக்கம், மறுபக்கம் திமுகவுடன் இணக்கம், இதற்கு நடுவில் சசிகலாவுடன் மறைமுக நட்பு தொடரும் ஓபிஎஸ்ஸின் நடவடிக்கையே அனைத்து அதிமுக மாற்றங்களுக்கும் காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.