மதுபானம் வாங்க ஏன் ஆதார் கார்டை கட்டாயமாக்கக் கூடாது?... மதுரை ஹைகோர்ட் கேள்வி
மதுரை: டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க ஏன் ஆதார் கார்டை கட்டாயமாக்க கூடாது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
பார் உரிமங்களை புதுப்பிப்பதை நிறுத்தி வைக்க கோரிய வழக்கில் வயது வந்தவர்கள் மட்டும் மதுபாட்டில்களை வாங்குவதற்காக ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கலாமா? என்று கேட்ட நீதிபதிகள் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மார்ச் 12-ல் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை ஏன் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை என மாற்றக் கூடாது? என்றும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்திருக்கும் பார்களை ஏன் மூடக்கூடாது? எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தஞ்சை பள்ளி அக்ரஹாரம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைய உள்ளதால் அதற்கு தடை விதிக்கவேண்டும் என தஞ்சையை சேர்ந்த மகேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, தஞ்சை பள்ளி அக்ரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதித்து உத்தரவிட்டனர்.
தொடர்ந்து தமிழக உள்துறை செயலர், டாஸ்மாக் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரை ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்தும் உத்தரவிட்டனர்.