ஓ. ராஜா நீக்கத்திற்கு தினகரனுடன் கை கோர்த்ததுதான் காரணமா?
ஓ.ராஜா டிஸ்மிஸ் செய்யப்பட்டதன் அடிப்படை காரணங்கள் என்ன?
Recommended Video
மதுரை: சால்வைகள், மாலைகள், என வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும்போதே ஓ.ராஜா டிஸ்மிஸ் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை அதிமுக தரப்பில் ஏற்படுத்தி உள்ளது.
துணை முதல்வரும், முதல்வரும் கூட்டாக இணைந்துதான் இந்த அறிவிப்பை வெளியிட்டாலும், ஓ.ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு 2, 3 காரணங்கள் கூறப்படுகின்றன. தேனி மாவட்ட அதிமுக பொருளாளராக இருப்பவர் செல்லமுத்து.
ஆவின் தலைவர் பதவிக்கு செல்லமுத்துவும் ஆசைப்பட்டார், ஓ.ராஜாவும் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் ஓ.ராஜா தலைவராக அறிவிக்கப்பட்டதும், செல்லமுத்துவுக்கு ஆத்திரம் வந்திருக்கிறது. தனக்கு பொறுப்பை தருவதாக சொல்லிவிட்டு, தம்பிக்கு கொடுத்துவிட்டார்.
பதவி பறிப்பு
அதனால் ஓபிஎஸ்ஸால், அவரது தம்பியை கூட சமாதானம் செய்யமுடியவில்லை என்பதை பகிரங்கமாக வெளியே சொல்வேன் என்றும், கூடிய சீக்கிரம் திமுகவிற்கு சென்று விடுவேன் என்றும் கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாகவே ஓ.ராஜா டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கலாம் என்கின்றனர் ஒரு தரப்பினர்.
டிடிவி தினகரன்
மற்றொரு தரப்பினரோ, கூட்டுறவு பால்வளத் தலைவர் பதவிக்கு 8 டைரக்டர்கள் சேர்ந்து தேர்ந்தெடுக்க முடியும் என்பது விதி. இந்த 8 பேரில் 3 பேர் டிடிவி தினகரன் அணியை சேர்ந்தவர்கள். அந்த 3 பேரின் வீட்டுக்குதான் ஓ.ராஜா சென்று ஆதரவு அளிக்கும்படி கேட்டிருக்கிறார்.
முதல்வர் பழனிசாமி
இப்படி போய் பேசும்போதுதான் ஆதாரம் அதிமுக தரப்புக்கு போய்விட்டது. இதை பார்த்து கொதித்து போன முதல்வர் உடனடியாக டிஸ்மிஸ் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். ஏற்கனவே தேனி மாவட்டத்தில் நீயா, நானா பஞ்சாயத்து முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் நடந்து கொண்டிருக்கிறது.
பலம் குறைப்பா?
கடந்த அக்டோபர் மாதம்கூட, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் எடப்பாடியார் பேரவை தொடங்கப்பட்டது, ஓ.பி.ஸ். ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பலத்தை தொகுதியில் குறைக்கவே ஓ.ராஜா விஷயத்தில் முதல்வர் இப்படி நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஏராளமான புகார்கள்
இதற்கெல்லாம் மேலாக, ஓ.ராஜா மீது ஏற்கனவே உள்ள பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கு, திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது நடந்து வருகிறது. இதை வைகை ஆற்றுப்படுகையில் திருட்டு மணல் அள்ளி விற்பது என்று ஏராளமான குற்றச்சாட்டுகள் ராஜா மீது இருக்கிறது.
செல்வாக்கு சரிவு
இதையெல்லாம் திருத்தி கொள்ளும்படியும், விட்டுவிடும்படியும் ஓபிஎஸ் எவ்வளவோ கூறியும் தனது போக்கை ஓ.ராஜா மாற்றி கொள்ளவில்லை என தெரிகிறது. தொடர்ந்து இப்படியே நிலை நீடித்தால், அது தொகுதியிலும், கட்சியிலும் தனது செல்வாக்கை மேலும் சரிவிற்கு கொண்டு செல்லும் என்பதாலேயே டிஸ்மிஸ் நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.