காவலர்களின் செயலால் உருக்குலைந்த குடும்பம்.. இளைஞர் சாவு.. மனைவி தற்கொலை முயற்சி
Recommended Video
மதுரை: மதுரையில் வாகன சோதனையில் போலீசார் லத்தியால் தாக்கியதில் இளைஞர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனால் ஏற்பட்ட மனவேதனையில் அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவலர்களின் இரக்கமற்ற செயலால் தற்போது அந்த குடும்பமே உருகுலைந்து போய் உள்ளது..
மதுரை சிம்மக்கல் அருகே கீழ் பாலத்தில் கடந்த சனிக்கிழமை இரவு அப்பகுதியில் டெல்டா பிரிவு காவலர்கள் வாகன சோதனை நடத்தினர். அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தகுமார் மற்றும் சரவணகுமார் ஆகிய இருவரும் வாகனத்தில் சென்றபோது சோதனைக்காக நிறுத்தாமல் சென்றுள்ளனர்.
இதனால் திடிரென காவலர்கள் லத்தியால் தாக்கியதில் பின்னால் அமர்ந்து சென்ற விவேகானந்தகுமார் படுகாயம் அடைந்தார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேகானந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேற்றைய தினம் சம்பவம் தொடர்பாக கொலை வழக்குபதிவு செய்ய வேண்டும் உறவினர்களின் தொடர் பேராட்டம் நடத்தினர். தாக்குதல் சம்பவத்தின் போது பணியில் இருந்த 6 காவலர்களின் பெயரை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சாந்தகுமார் அறிவித்த நிலையில் இரவு உடற்கூராய்வு நடைபெற்றது.
இதனையடுத்து இளைஞர் உயிரிழப்புக்கு காரணமான போலிசார் மீது கொலை வழக்குபதிவு செய்தால் மட்டுமே உடலை வாங்கபோவதாக உறவினர்கள் கூறினர்.
இந்நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்த விவேகானந்தகுமாரின் மனைவி கஜப்பிரியா (25) வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை முயன்றார்.உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
போலிசார் தாக்குதலில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் இருந்து மீள முடியாத நிலையில் தற்போது விவேகானந்தகுமாரின் மனைவியும் தற்கொலை முயற்சி செய்து கொண்ட நிகழ்வு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விவேகானந்தகுமார் - கஜப்பிரியா இவர்களுக்கு சாய்சரன் என்ற ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை விவேகானந்தகுமார் உடல் வாங்கப்படாத நிலையில் அடுத்தடுத்த நிகழ்வால் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.