சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? 'நச்சுன்னு' கேட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை
மதுரை: பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதால் சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா என்று நறுக் கேள்வியை எழுப்பியுள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று அதிகளவில் பதக்கங்களும், பரிசுகளும் பெற்றுள்ளனர்.
அவர்களை கவுரவப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு, பரிசுகளை வழங்குகிறது. ஆனால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை.
லடாக் யூனியன் பிரதேசமே சட்டவிரோதமாம்... பரூக் அப்துல்லா சொன்னதை போலவே பேசும் சீனா
ஒரே மாதிரி சலுகை
இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையை சேர்ந்த மதுரேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை அரசுகள் சமமாக பார்ப்பதில்லை என்றும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிப்பதில்லை என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் உத்தரவு
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. "தமிழகத்தில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது, மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசால் கொடுக்கப்படும் உதவித்தொகை எவ்வளவு?, மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான திட்டங்கள் என்ன? என்று மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பதக்கங்கள்
விளையாட்டுத்துறையில் ஏழை எளிய வீரர்கள் சாதிப்பதற்காக தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்தும் பதிலளிக்குமாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். மேலும், வழக்கு தாக்கல் செய்த, மனுதாரர் மாநில அளவிலும், சர்வதேச அளவிலும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களையும் வென்றதை சுட்டிக் காட்டினர் நீதிபதிகள்.
சச்சின் டெண்டுல்கர்
இப்படி பதக்கம் பெற்றும், எஸ்எஸ்எல்சி மட்டுமே படித்துள்ளதால் அவரை தமிழக அரசு அலுவலக உதவியாளராக நியமனம் செய்துள்ளது. இதேபோல், பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர்தான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். அவரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.
விளையாட்டுத் துறை
விளையாட்டுத்துறையில் சாதிக்கும் மாற்றுத் திறனாளிகளை உலகின் பல நாடுகளும் கொண்டாடுகின்றன. ஆனால், தமிழகத்தில் அவர்கள் கொண்டாடப்படுவது கிடையாது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கும் நிலையில், 10ம் வகுப்பு படித்த காரணத்தால் அலுவலக உதவியாளர் பணி கொடுக்கப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் நடந்துள்ளது. இவ்வாறு காரசாரமாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.