வாக்குப் பதிவு இயந்திர அறைக்குள் மர்மமாக சென்ற பெண் அதிகாரி! மதுரையில் பரபர.. நள்ளிரவு வரை போராட்டம்
மதுரை: மதுரையில், வாக்கு எண்ணும் மையத்திற்குள், யாருக்கும் தெரியாமல் பெண் அதிகாரி அத்துமீறி நுழைந்ததாக வெளியான தகவலும், அதை அடுத்து எதிர்க் கட்சி வேட்பாளர்கள் தர்ணா போராட்டத்தில், நள்ளிரவுவரை ஈடுபட்ட சம்பவமும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வேலூர் தவிர்த்த பிற 38 லோக்சபா தொகுதிகளுக்கும், கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்கு எண்ணும் மையத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு, அங்கெல்லாம் பலத்த, பாதுகாப்பு போடப்பட்டது.
வருகிறது ஹைட்ரோ கார்பன் திட்டம்.. மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி.. டெல்டா மக்கள் அதிர்ச்சி!
மருத்துவ கல்லூரி அறைகள்
சித்திரை திருவிழா காரணமாக, மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடத்த, தேர்தல் ஆணையம் சிறப்பு அனுமதி வழங்கியிருந்தது. இதை அடுத்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டன. அங்கு நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு தர்ணா
இந்த நிலையில், நேற்று பெண் அதிகாரி ஒருவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று, சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. இந்த தகவலை அறிந்ததும், திமுக கூட்டணியின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர், டேவிட் அண்ணாதுரை, சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள், ஓட்டுப் பதிவு மிஷின் வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு வெளியே, நேற்றிரவு, குவிந்தனர்.
சிசிடிவி காட்சிகள்
ஆட்சியரின் அனுமதியின்றி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் சென்ற பெண் அதிகாரி யார்? அவர் என்ன செய்தார் என்பது போன்ற தகவல் வெளியே வரவேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள சிசிடிவி காட்சிகளை போட்டு பார்த்து, உள்ளே என்ன நடந்தது என்பதை பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அறைக்குள் அனுமதி
ஆனால், உரிய பதில் கிடைக்காததன் காரணமாக, நள்ளிரவு வரை வேட்பாளர்களும், கட்சிக்காரர்களும் வாக்கு எண்ணிக்கை மையத்தின் வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அங்கு, பதட்டமான சூழ்நிலை உருவானது. இதன் பிறகு, வெங்கடேசன் மற்றும் டேவிட் அண்ணாதுரை ஆகிய இருவரை மட்டும், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று பார்க்க போலீசார் அனுமதித்தனர். அவர்கள் சென்று பார்வையிட்ட பிறகு திருப்தி அடைந்து திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.