பூர்ணிமாவுக்கு தூக்க கலக்கம்.. தடுமாறி விழுந்து.. ரயிலுக்கு அடியில் சிக்கி.. மதுரையில் பரபரப்பு
அனந்தபுரி ரயிலுக்கு அடியில் சிக்கி கொண்ட பெண் மீட்கப்பட்டுள்ளார்
Recommended Video
மதுரை: தூக்க கலக்கத்தில் இருந்த பூர்ணிமா, பிளாட்பாரத்தில் இருந்து தவறி ரயிலுக்கு அடியில் சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது!
சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லக்கூடிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரையை சேர்ந்த பூர்ணிமா வந்துள்ளார். அவருடன் அவரது 2 குழந்தைகளும் வந்திருந்தனர்.
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் அதிகாலை 4.50 மணிக்கு வண்டி நின்றது. ஆனால் ரயில் நின்றதுகூட தெரியாமல் பூர்ணிமா நன்றாக தூங்கி விட்டார். ரயில் புறப்படும் நேரத்தில்தான் சுதாரித்து கொண்டு, அவசர அவசரமாக இறங்க முயற்சித்தார்
செக்ஸ் டார்ச்சர் தருகிறார்.. பல பெண்களுடன் தொடர்பு இருக்கு.. இன்ஸ்பெக்டர் மீது பெண் பரபரப்பு புகார்
தூக்கம்
அப்போது தூக்க கலக்கத்திலேயே இருந்த பூர்ணிமா, தவறி விழுந்து ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் நடுவில் சிக்கிக்கொண்டார். இதைப்பார்த்த மற்ற பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். ஒருசிலர் வேகமாக சென்று அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.
சிரமம்
அபாயத்தை உணர்ந்து கொண்ட ரயில் ஓட்டுனர் ரயிலின் வேகத்தை மெதுவாக குறைத்து நிறுத்தினார்.
ஆனால் அதற்குள் அந்த பெண் ரயிலுக்கு கீழ் உள்ள பயோடாய்லெட் அமைப்பில் சிக்கிக் கொண்டு 200 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். விரைந்து வந்த ரயில்வே போலீசார் பூர்ணிமாவை மீட்க முயன்றனர். ஆனால் முடியவே இல்லை. ரயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே குறுகலான இடத்தில் பூர்ணிமா மாட்டிக் கொண்டதால் அவரை வெளியே கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது.
ஒருமணி நேரம்
அதனால் உடனடியாக பெரியார் பஸ் ஸ்டாண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்படவும், அவர்கள் விரைந்து வந்தனர். பிளாட்பாரத்தை உடைத்து பூர்ணிமாவை வெளியே கொண்டு வர முயன்றனர். அதன்படி கிட்டத்தட்ட ஒருமணிநேரத்துக்கும் மேலாக போராடியே பூர்ணிமாவை மீட்டனர். இடிபாட்டில் சிக்கியதால் பூர்ணிமாவுக்கு காயம் ஏற்படவே, சிகிச்சைக்காக ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரயில்கள் தாமதம்
இந்த மீட்பு பணி காரணமாக, மதுரையில் இருந்து சென்னை செல்ல வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னையில் இருந்து மதுரை வரக்கூடிய பாண்டியன் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் அந்தந்த ரெயில்களில் இருந்த பயணிகள் சரியான நேரத்தில் ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். ரெயிலுக்கு அடியில் பூர்ணிமா சிக்கி கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.