மதுரை அருகே பயங்கரம்.. வகுப்பறையில் ஆசிரியை சரமாரியாக வெட்டிக் கொலை... கணவர் கைது
மதுரை: மதுரை அருகே திருமங்கலம் பகுதியில், வகுப்பறைக்குள் புகுந்த நபர், தனது மனைவியான ஆசிரியையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் குரு முனீஸ்வரன். இவருடைய மனைவி ரதிதேவி (35). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமாகி ஹர்ஷவர்தன் (6) ஹர்ஷவர்த்தினி (6) என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
குரு முனீஸ்வரன் சிவில் இன்ஜினியர். இவர் வெளிநாடு சென்றுவிட்டு வந்து மூன்று வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் ரதிதேவி காரியாபட்டி அருகே உள்ள சித்தனேந்தல் பகுதியில் தங்கியிருந்து, அங்கிருந்து திருமங்கலம் பி கே என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். எட்டாம் வகுப்பு ஆசிரியராக இருந்தார்.
இன்று மதியம் மூன்று முப்பது மணி அளவில் குரு முனீஸ்வரன் தன்னுடைய மனைவியை பார்ப்பதற்காக அங்கு வந்தார். காவலாளியிடம் அனுமதி பெற்று பள்ளிக்குள் சென்றுள்ளார். வகுப்பறைக்கு வந்த அவர் அங்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த ரதிதேவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மாணவர்கள் இதைப் பார்த்து அதிர்ந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக ரதிதேவியை வெட்டியுள்ளார்.
தப்பி ஓட வழியில்லாமல் சிக்கிக் கொண்ட ரதிதேவி மாணவர்கள் கண் முன்பாகவே ரத்த வெள்ளத்தில் பிணமானார். தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் மற்றும் டிஎஸ்பி அருண் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பள்ளி அறையிலேயே மனைவியை வெட்டி படுகொலை செய்த குரு முனீஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம் தனியார் பள்ளியில் பள்ளியில் நுழைந்து ஆசிரியை அவருடைய கணவர் மாணவர்கள் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது