என்ன அவலம் இது?.. மதுரை பேருந்தில் "ஃபுட்-போர்ட்" அடிக்கும் பெண்கள்.. பரபரப்பு வீடியோ காட்சிகள்!
மதுரை: மதுரையில் பேருந்து ஒன்றில் பெண்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் மூலம் பணிக்கு செல்லும் பெண்கள் உள்பட ஏராளமான மகளிர் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அரசு விரைவு பேருந்து ஓட்டுனர்களுக்கு.. அரசு கடும் எச்சரிக்கை.. புது அறிவிப்பு
பெண்கள்
குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், வறுமையான பின்னணி கொண்ட பெண்கள் இதனால் அதிகம் பலன் அடைந்துள்ளனர். இது பெண்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் பெண்களுக்கு இலவசம் என்கின்ற பேருந்துகளில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பின் காரணமாக ஏராளமான பெண்கள் பேருந்து நிறுத்தங்களில் நீண்டநேரம் காத்திருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்கள் அவலம்
இத்தகைய பேருந்துகள் சில நேரங்களில் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுவதால் அதிக அளவிலான பயணிகள் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. பெண்கள் இலவசமாக செல்லும் நகர பேருந்துகள் குறைவாக இருப்பதால், கிடைக்கிற பேருந்துகளில் பெண்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இடம் இல்லை என்றாலும் படிகளில் தொங்கி செல்லும் அவலம் ஏற்பட்டு இருக்கிறது.
மதுரை
இந்தநிலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து காளவாசல் பகுதிக்கு சென்ற மாநகரப் பேருந்தில் பெண்கள் கூட்ட நெரிசல் காரணமாக புட் போர்டில் நின்றவாறே பயணம் செய்துள்ளனர். வயது முதிர்ந்த பெண்களும், இளம் பெண்களும் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இரவு நேரத்தில் இவர்கள் செய்த பயணம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வைரல்
பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் இருந்து வரும் அபாயகரமான புட் போர்ட் கலாச்சாரம் தற்போது பெண்கள் மத்தியிலும் பரவி உள்ளது. பெண்களும் புட் போர்டில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. கூடுதலாக நகர பேருந்துகளை விட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.