மனைவியுடன் விவாகரத்து.. அடுத்தவர் மனைவியுடன் கள்ளக்காதல்.. திருப்பரங்குன்றத்தில் இளைஞர் கொலை
திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூர் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவருடைய மனைவி அமுதா. இவர்களது மகன் பிரேம்குமார் (28). இவர் கூத்தியார்குண்டு என்ற கிராமத்தில் லேத் பட்டறை வைத்துள்ளார்.
இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எனினும் குடும்பத் தகராறு காரணமாக இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து விட்டார். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரேம்குமாரின் வீட்டருகே அவரது உறவினர் பிரகாஷ் (25) தனது மனைவியுடன் குடி வந்தார்.
தகராறு
இவர் கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். உறவினர்கள் என்பதால் பிரகாஷின் மனைவியும் பிரேம்குமாரும் நெருக்கமாக பழகி வந்தனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இந்த விவகாரம் பிரகாஷுக்கு தெரியவந்ததை அடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
வீட்டுக்கே சென்ற கள்ளக்காதலன்
இதைத் தொடர்ந்து பிரகாஷ் வீட்டை காலி செய்து விட்டு மதுரை அருகே உள்ள கருப்பாயூரணிக்கு சென்றார். அங்கு சென்ற பிறகு தொழில் தொடர்பாக பிரகாஷ் அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். இதை அறிந்த பிரேம்குமார் பிரகாஷின் வீட்டுக்கே சென்று அவரது மனைவியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
வீட்டுக்கு சென்ற பிரகாஷ்
இந்த விவகாரமும் பிரகாஷின் காதுகளுக்கு சென்றது. இதையடுத்து இருவருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை பிரேம்குமார் தனது வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பிரகாஷ் உள்பட 3 பேர் வீட்டின் பின்பக்க சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர்.
போலீஸார் வலை
பின்னர் பயங்கர ஆயுதங்களால் பிரேம்குமாரை கடுமையாக தாக்கினர். பிரேம்குமாரின் அலறல் சப்தம் கேட்டு அவரது தாயார் அமுதா அங்கு வந்து அவர்களை தடுத்தார். அப்போது அவரை கீழே அழைத்துக் கொண்டு ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு பிரேம்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர். இதனிடையே அமுதாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து அமுதாவை மீட்டனர். இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.