4 வருடமாக சிறுமியை சீரழித்த இருவர்.. 2 குழந்தைகளுக்கு தாயான கொடுமை.. மதுரையில்
சிறுமியை 4 வருடமாக சீரழித்த 2 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
மதுரை: 4 வருடமாக சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 2 இளைஞர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன், 2 குழந்தைகளுக்கு தாயான சிறுமியையும் போலீசார் மீட்டுள்ளனர்.
மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்த சிறுமியை, விஜயகுமார், வேலுச்சாமி என்ற இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்கள். இவர்கள் இருவருமே அதே பகுதியை சேர்ந்தவர்கள்தான்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சிறுமியை பலமுறை இவர்கள் நாசம் செய்ததால், அவள் 2 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறாள். பாலியல் கொடுமையையும், குழந்தை பிறந்த விஷயத்தையும் வெளியே சொல்லக் கூடாது என்று ரெண்டு பேருமே சிறுமியை இவ்வளவு நாள் மிரட்டி வந்துள்ளனர்.
4 வருடமாகவே சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபோதே, இந்த கொடுமை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில்தான், இந்த விஷயம் வெளியே வந்து அனைவரின் நெஞ்சையும் பதற வைத்துள்ளது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று 2 பேரில் ஒருவரான வேலுச்சாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் 2 குழந்தைகளையும் மீட்டு தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் அரசிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான விஜயகுமார் தலைமறைவாக இருப்பதால் அவரை தேடி வருகின்றனர்.