கர்நாடகாவில் பேருந்து விபத்து... 9 குழந்தைகள் உட்பட 30 பேர் பலியான பரிதாபம்!
கர்நாடகா மாநிலம் மாண்டியா அருகே தனியார் பேருந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள், 15 பெண்கள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.
மண்டியா: கர்நாடகா மாநிலம் மாண்டியா அருகே தனியார் பேருந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள், 15 பெண்கள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூருவில் இருந்து 105 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாண்டியா மாவட்டம் பாண்டவபுரம் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பாண்டவபுரத்தில் இருந்து, மாண்டியா நகர் நோக்கி 35 பேருடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.
கனகனமராடி என்ற இடத்தில் பேருந்து சென்ற போது, பேருந்தின் முன்பக்கவாட்டின் ஆக்சில் முறிந்ததால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, காவிரி ஆற்றின் விஸ்வேஸ்வரய்யா கால்வாயில் தலைகுப்புற கவிழ்ந்தது. தண்ணீரில் மூழ்கிய பேருந்தில் இருந்த 7ம் வகுப்பு மாணவன் லோஹித் மற்றும் கிரி ஆகியோர் ஜன்னல் வழியாக வெளியேறி நீச்சலடித்து தப்பினர்.
பேருந்து விபத்துக்குள்ளனதை நேரில் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கால்வாயில் குதித்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட போரட்டத்திற்கு பிறகு விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நான்கு பேரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தில், 9 குழந்தைகள் உட்பட 30 பேர் பலியாகி உள்ளனர். விபத்து குறித்து பாண்டவபுரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்து குறித்து அறிந்த முதல்வர் குமாரசாமி நேரில் சென்று பார்வையிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்துக்குள்ளான பேருந்து, 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது விசாரணையில் தெரிந்ததை தொடர்ந்து, பேருந்தை இயக்க அனுமதி வழங்கிய ஆர்.டி.ஓ. அதிகாரிகள் உடனடியாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாண்டியாவில் நடந்த இந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.