மாண்டியா விபத்து.. மரண ஓலங்களுக்கு மத்தியில் உயிர் தப்பிய இருவர்..30 பேரை காப்பாற்ற முடியாத வருத்தம்
பெங்களூர்: மாண்டியா விபத்தில் சிக்கிய பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கொண்டு உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் அங்கிருந்த சிறுவனையும் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பாண்டவ்பூர் என்ற இடத்திலிருந்து மாண்டியாவுக்கு ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கனகனமாரள்ளி என்ற இடத்தில் பேருந்து வந்தபோது திடீரென தாறுமாறாக ஓடி அருகில் இருந்த கால்வாயில் விழுந்தது. இந்த கோர விபத்தில் 30 பேர் பலியாகிவிட்டனர்.
இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்பதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த நிலையில் விபத்து நடந்த பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு இருவர் தப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[மாண்டியா பேருந்து விபத்தை பார்வையிட்ட அம்பரீஷ்.. "இறுதி மூச்சு வரை மக்களுக்காக போராடினாரே" ]
சிறுவன்
இந்த விபத்தில் இளைஞர் கிரீஸ் ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே வந்துள்ளார். அதை தொடர்ந்து அங்கிருந்த சிறுவன் ரோகித்தையும் அவர் காப்பாற்றியுள்ளார்.
வீட்டுக்கு திரும்பிய
உயிர் தப்பியதில் ரோஹித் பள்ளி மாணவன் ஆவார். இவர் வதேசமுத்திரா கிராமத்தை சேர்ந்தவர். நேற்று சனிக்கிழமை என்பதால் பள்ளி அரைநாள் இயங்கியுள்ளது. பள்ளி முடிந்து ரோஹித் பேருந்தில் வீட்டுக்கு திரும்பிய நிலையில்தான் இந்த விபத்து நடந்தது.
பலி
இந்த விபத்து குறித்து தப்பி உயிர் பிழைத்தது குறித்து கிரீஸ் கூறுகையில் விபத்து நடந்ததும் பேருந்தின் கன்டக்டர் ஜன்னல் வழியாக வெளியேறி உயிர் தப்பினார். ஆனால் அவர் எந்த பயணியையும் காப்பாற்ற முன்வரவில்லை. பேருந்தின் டிரைவர் பலியானாரா இல்லை அவரும் தப்பினாரா என்பது தெரியவில்லை.
தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது
நான் மக்களுடன் சேர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டேன். பஸ் விபத்தில் சிக்கியதுமே அதில் இருந்தவர்கள் உயிருக்கு போராடிய காட்சி என் கண்களை விட்டு இன்னும் அகலவில்லை என்றார். இந்த விபத்து குறித்து சிறுவன் கூறுகையில் பஸ் கால்வாய்க்குள் விழுந்தவுடன் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது.
வேதனை
பஸ்ஸில் இருந்தவர்கள் தங்களை காப்பாற்றும்படி சப்தம் போட்டனர். அவர்களது மரண ஓலம் என் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. நான் இந்த விபத்தில் உயிர் பிழைத்தது இறைவன் செயல். ஆனால் என்னால் மற்றவர்களை காப்பாற்ற முடியவில்லை என்று நினைக்கும்போது வேதனையாக உள்ளது என்றார்.