36 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு.. கஃபே காபி டே நிறுவனர் சித்தார்த்தாவின் உடல் கண்டெடுப்பு
Recommended Video
மங்களூர்: முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி. சித்தார்த்தாவின் உடல் 36 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு நேத்ராவதி ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி. சித்தார்த்தா (58). இவர் கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளராவார். இவர் திங்கள்கிழமை தனது காரில் மங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது உல்லாலில் உள்ள நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் வண்டியை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து காரை விட்டு இறங்கிய பின்னர் அவர் யாருடனோ போனில் பேசியுள்ளார். பின்னர் மாலை 6.30 மணிக்கு ஆற்றுப் பாலத்தில் நடந்து விட்டு வருவதாக கூறினார்.
காபி எஸ்டேட் ஓனர் மகனாக பிறந்து.. காபி கிங்காக மறைந்த சித்தார்த்தா!
தகவல்
இதையடுத்து அவர் 8 மணியாகியும் அவர் திரும்பாததால் அச்சமடைந்த டிரைவர் அவரை அங்கு சென்று தேடியுள்ளார். ஆனால் சித்தார்த்தா கிடைக்கவில்லை. போன் செய்தாலும் போன் ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதையடுத்து சித்தார்த்தாவின் மகனுக்கு தகவல் கொடுத்தார்.
ஊழியர்கள் கடிதம்
ஊழியர்களுக்கு கடந்த 3 தினங்களுக்கு முன்னர் சித்தார்த்தா எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் அவர் நான் ஒரு தொழிலதிபராக தோற்றுவிட்டேன். என்னால் லாபகரமாக தொழிலை நடத்த முடியவில்லை. இத்தனை நாள் போராடி விட்டேன். இனியும் போராட வேண்டாம் என நினைக்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள் என எழுதியிருந்தார்.
5 கி.மீ. தூரம்
தகவலின் பேரில் தக்ஷின போலீஸார், கடலோர காவல் படையினர், உள்ளூர் மீனவர்கள் என சித்தார்த்தாவின் உடலை தேடி வந்தனர். கடிதத்தில் சித்தார்த்தா எழுதியிருந்ததை அடுத்து நிச்சயம் அவர் தவறான முடிவை எடுத்துள்ளார் என போலீஸார் முடிவு செய்தனர். மேலும் மாலை 6.30 மணி அளவில் நடுத்தர வயதினர் ஒருவர் ஆற்றில் விழுந்ததை பார்த்ததாக மீனவர் ஒருவர் சாட்சியம் அளித்ததால் போலீஸார் தனது தேடுதல் பணியை முடுக்கிவிட்டனர்.
36 மணி நேர தேடுதல் வேட்டை
இந்த நிலையில் நேத்ராவதி ஆற்றின் பாலத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அவரது உடல் ஒதுங்கியது. சுமார் 36 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு அவரது உடலை போலீஸார் மீட்டனர். இதன் மூலம் 2 ஆண்டுகளாக கடன் தொல்லையால் போராடி வந்த சித்தார்த்தாவின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
மங்களூருவில் உள்ள வென்லாக் மருத்துவமனையில் சித்தார்த்தாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.