சிஏஏவை ஆதரித்த கேரள இந்துக்களுக்கு தண்ணீர் மறுக்கப்பட்டதாக டுவிட்.. ஷோபா எம்பி மீது வழக்கு
மங்களூரு: குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ஆதரித்ததற்காக மலப்புரத்தில் உள்ள இந்து குடும்பங்களுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட கர்நாடகா பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லேஜே மீது கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
உடுப்பி-சிக்மகளூருவின் லோக்சபா எம்பியான ஷோபா கரண்ட்லேஜே ட்வீட் செய்ததாவது: "கேரளா மற்றொரு காஷ்மீர் ஆக மாற நடவடிக்கை எடுத்து வருகிறது! மலப்புரத்தைச் சேர்ந்த குட்டிபுரம் பஞ்சாயத்தில் உள்ள இந்துக்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்ததால் அவர்களுக்கு தண்ணீர் வழங்குவது மறுக்கப்பட்டுள்ளது.. ஆனால் சேவபாரதி இயக்கம் அன்றிலிருந்து தண்ணீர் வழங்கி வருகிறது. கடவுளின் தேசத்தில் இப்படி ஒரு சகிப்புத்தன்மை இன்மை (வெறுப்பு) சத்தமில்லாமல் நடக்கிறதே" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு வைரலாகிய நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் மலப்புரத்தில் வசிப்பவருமான சுபாஷ் சந்திரன் கேரள காவல்துறையினரிடம் புகார் அளித்தார். தண்ணீர் வழங்காத பிரச்சினைக்கு குடியுரிமை திருத்த சட்டத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் நீர்ப்பாசனத்திற்கான நீர் மற்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதே காரணம் என்றும் கூறியிருந்தார்.
CAA: ரிச்சி தெருவில்.. பேனாவில் புகுந்து புறப்பட்ட சிஏஏ ஆதரவு பிரச்சாரம்.. கடை முன்பு களேபரம்
பகைமையை ஊக்குவித்தல்
இதையடுத்து எம்பி ஷோபா கரண்ட்லேஜே மீது ஐபிசியின் பிரிவு 153 (ஏ) இன் கீழ் (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், நல்லிணக்கத்தை பராமரிப்பதற்கு பதில் பாரபட்சமற்ற செயல்களைச் செய்தல்) கேரளாவின் குட்டிபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
|
கடும் பதிலடி
இந்த வழக்கை அடுத்து ஷோபா கரண்ட்லேஜே வெள்ளிக்கிழமை ட்வீட் செய்ததாவது: "கேரள அரசை வாழ்த்துங்கள்! செருகுணுவின் தலித் குடும்பங்களுக்கு ஏற்பட்ட பாகுபாடுகளுக்கு எதிராக செயல்படுவதற்கு பதிலாக, அவர்கள் என் மீது வழக்கு பதிவு செய்தனர்! செயல்படாத, பக்கச்சார்பான இடது அரசாங்கத்தின் இந்த அழுத்தமான தந்திரங்களுக்கு எதிராக ஒட்டுமொத்த சமுதாயமும் ஒன்றுபடுவதற்கான நேரம் இது " என கூறியிருந்தார்.
அமைச்சர் ரவி புகார்
இதனிடையே ஷோபாவுக்கு பாஜக தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொண்டதாக கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவி குற்றம் சாட்டி உள்ளார், இது தொடர்பாக அவர் கூறுகையில், "கர்நாடக எம்.பி ஷோபாவுக்கு எதிராக கேரள காவல்துறை எடுத்த நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அரசாங்கத்தின் தலைவராக தனது கடமையைச் செய்வதற்குப் பதிலாக, முதல்வர் பினராயி விஜயன் ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார். அன்புள்ள கேரளா, விழிப்புணர்வுக்கான நேரம் இது. . . #ISupportShobhaKarandlaje என ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
வெட்கம் இல்லையா
கர்நாடகா பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா, ‘CAA ஐ ஆதரித்ததற்காக முஸ்லிம்களால் தலித்துகளுக்கு தண்ணீர் மறுக்கப்படுகிறது' என்றார். "பினராயி விஜயனுக்கு வெட்கமாக இல்லையா! பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லேஜே மீது வழக்குப் பதிவு செய்வதற்குப் பதிலாக, சி.ஏ.ஏ சார்பு பேரணியில் பங்கேற்றதற்காக குடிநீர் மறுக்கப்படும் செருகுன்னுவின் தலித்துகளுக்கு நீதி வழங்குவதில் அவரது அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார். .