திடீரென அசைந்த சூட்கேஸ்.. ஆடிப்போன வாட்ச்மேன்.. திறந்து பார்த்தால்.. அதிர்ச்சியில் மங்களூரு மக்கள்!
சூட்கேஸில் வைத்து நண்பன் கடத்திவந்த சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது
மங்களூரு: ஊரடங்கினால் உச்சக்கட்ட வெறுப்பை அடைந்த இளைஞர் ஒருவர், நண்பனை சூட்கேஸில் வைத்து அடைத்து தன் வீட்டிற்கு கொண்டு வந்த சம்பவம் வியப்பையும், அதிர்ச்சியையும் தந்துள்ளது!
நாட்டு மக்களின் உயிரை காப்பதற்காக லாக்டவுன் போடப்பட்டுள்ளது.. நிலைமையை உணர்ந்த மக்களும் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இந்த ஊரடங்கு போடப்பட்டுள்ளதால்தான் இந்தியாவில் பலி எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல்களும் கூறுகின்றன!
ஆனால் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்தே பல சிக்கல்களை, இடர்களை மக்கள் சந்தித்து வரவும் செய்கின்றனர்.. எனினும் ஊரடங்கினை நீட்டிப்பது குறித்து தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
வியப்பு
எனினும் ஒருசிலர் சீரியஸ்தன்மை புரியாமல் ரோட்டில் தேவையில்லாமல் திரிகின்றனர்.. அவர்களை போலீசார் கண்டறிந்து நூதன தண்டனையை தந்து நோயின் தீவிரத்தை உணர்த்தி வருகின்றனர். இப்படி ஒரு ஆபத்தான சமயத்தில் மங்களூரில் நடந்த ஒரு சம்பவம் வியப்பை தந்துள்ளது.. கர்நாடக மாநிலம், மங்களூருவில் உள்ள அபார்ட்மென்ட்டிற்கு தொற்று பரவல் காரணமாக தடை போடப்பட்டுள்ளது.
தனி நபர்
அதனால் யாரும் அந்த அபார்ட்மென்டில் நுழையவும், வெளியே வரவும் முடியாது. இந்த அபார்ட்மென்ட்டில் வசித்து வருபவர் பிரவீன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. 20 நாட்களாக தனியாக வீட்டில் இருக்கவும் கடுப்பாகி உள்ளார்.. அதனால் துணைக்கு தன் நண்பனையும் அபார்ட்மென்ட்டுக்கு அழைத்து வரலாம் என முடிவு செய்தார். அதற்காக சம்பவத்தன்று இரவு ஒரு பெரிய சூட்கேஸுடன் அபார்ட்மென்ட்டில் இருந்து வெளியே வந்தார்.
சூட்கேஸ்
போக்குவரத்து வசதி இல்லாமல், இந்த ராத்திரி நேரத்தில் சூட்கேஸ் டுத்து கொண்டு பிரவீன் எங்கே போகிறார் என வாட்ச்மேனுக்கு சந்தேகம் வந்தது.. எனினும் அவர் எதையும் கேட்டு கொள்ளவில்லை. சூட்கேஸை எடுத்து பைக்கில் வைத்து கொண்டு கிளம்பி சென்றுவிட்டார்.. இரவு 8 மணிக்கு கிளம்பி போன பிரவீன் ராத்திரி 2 மணிக்கு வீட்டுக்கு நண்பனுடன் திரும்பி உள்ளார்.. பைக்கை அபார்ட்மென்ட் உள்ளே கொண்டு போனால் சத்தம் கேட்டுவிடும் என்று வெளியே நிறுத்திவிட்டு, கையில் இருந்த சூட்கேஸில் நண்பனை உள்ளே புகுந்து ஒளிந்துகொள்ளுமாறு சொல்லி உள்ளார்.
புகார்
அதன்படியே சூட்கேஸிற்குள் நண்பன் ஒடிந்து நெளிந்து கூனி குறுகி படுத்து கொள்ள... சூட்கேஸை தூக்க செல்ல முடியாமல் இழுத்து சென்றார் பிரவீன்.. அப்போது சந்தேகம் அடைந்த வாட்ச்மேன் இதை பற்றி விசாரிக்கவும் பிரவீன் பூசி மெழுகி உள்ளார்.. உடனே அப்பார்ட்மென்ட் நிர்வாகத்திடம் முறையிடவும் அவர்கள் விரைந்து வந்து சூட்கேஸை திறந்து பார்த்தனர். அப்போதுதான் நண்பன் உள்ளே படுத்து கொண்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அனைவரும் சேர்ந்து போலீசில் புகார் தரவும், 2 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
ஆஜர்
பிறகு இரு வீட்டிலும் பெரியவர்களை போலீசார் வரவழைத்தனர்.. ஸ்டேஷன் சென்றபிறகு போலீசார் சொல்லிதான் பெற்றோர்களுக்கே இந்த விஷயம் தெரியவந்தது.. தொடர் விசாரணையும் நடந்தது.. இருவருக்குமே 17 வயது என்பதால், போலீசார் வழக்கு பதிவு செய்து சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.. இந்த வினோத சம்பவம் மங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது!!