துபாயிலிருந்து மங்களூர் வந்த கர்ப்பிணி.. அபார்ட்மென்ட்டுக்குள் அனுமதி மறுத்ததால் கருக்கலைந்த துயரம்
மங்களூர்: துபாயிலிருந்து மங்களூர் வந்த கர்ப்பிணிக்கு கொரோனா சோதனை செய்து அதில் அவருக்கு கொரோனா இல்லை என முடிவுகள் வந்த போதிலும் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க குடியிருப்புவாசிகள் மறுத்ததால் அவரது கரு கலைந்து போன துயர சம்பவம் நடந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் பொது போக்குவரத்து இன்றி வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் எனும் சிறப்பு விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். அது போல் கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் மூலமும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் துபாயிலிருந்து வந்தே பாரத் விமானம் மூலம் கர்ப்பிணி ஒருவர் மங்களூர் வந்தார். அவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு 3 நாட்கள் தங்க வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா சோதனை நடத்தியதில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என தெரியவந்தது.
கொரோனாவுக்கு பதஞ்சலியின் மருந்தா?.. யார் அனுமதி கொடுத்தது?.. வலுக்கும் எதிர்ப்பு
அபார்ட்மென்ட்
இதையடுத்து சில நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி அனுப்பினர். இதையடுத்து அவர் மங்களூரில் தான் தங்கியிருந்த அபார்ட்மென்ட்டுக்கு சென்றார். ஆனால் அந்த அபார்ட்மென்ட் அசோசியேஷன் அவரை உள்ளே விட அனுமதி மறுத்துவிட்டது.
மருத்துவமனை
இதையடுத்து அவர் துபாயிலிருந்து வந்த போது தங்கியிருந்த ஹோட்டலுக்கே அவரை அழைத்து சென்று உறவினர்கள் விட்டுவிட்டனர். இந்த அலைக்கழிப்பால் அவரது ரத்த அழுத்தம் அதிகரித்து உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை மறுக்கப்பட்டது.
மருத்துவர்கள்
பின்னர் வேறொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரது நிலை மோசமாக இருப்பதாகவும் தாய் மற்றும் வயிற்றில் இருக்கும் சிசு இருவரும் அபாய நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சிகிச்சை அளித்த போதிலும் தாயின் உயிரை மட்டும் மருத்துவர்கள் காப்பாற்றினர். எவ்வளவு போராடியும் கரு கலைந்துவிட்டது.
நுழைய விடாமல் தடுப்பு
இந்த துயரச் சம்பவம் நடந்துள்ள நிலையில் தற்போது அந்த பெண் மறுமுறை கொரோனா பரிசோதனை நடத்துவதற்காக ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மங்களூர் மாநகராட்சி ஆணையரோ அபார்ட்மென்ட் அசோசியேஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த பெண்ணை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்தது ஏன் என விளக்கம் கேட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்றார்.