ஒரு நிமிடத்தில்.. இரு கைகளில்.. 45 வார்த்தைகள் எழுதி மங்களூர் மாணவி உலக சாதனை
மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூரில் ஒரு மாணவி ஒரு நிமிடத்தில் இரு கைகளால் 45 வார்த்தைகளை எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூருவை சேர்ந்தவர் கோபட்கர். இவரது மனைவி சுமா பட்கர், இவர்களது மகள் ஆதிஸ்ரூபா (17). கோபட்கர் மங்களூருவில் ஒரு கல்வி பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.
அந்த பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இது போல் அந்த பயிற்சி மையத்தில் ஆதிஸ்ரூபாவும் படித்து வருகிறார். இந்த பயிற்சி மையத்தில் படித்து வருவோரின் தனித்திறனை வளர்த்துக் கொள்வதற்காக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
மாணவி
இந்த பயிற்சிகளை மாணவர்கள் ஆர்வத்துடன் கற்று வந்தனர். தற்போது 2 கைகளை ஒரே இடத்தில் பயன்படுத்தி ஆதிஸ்ரூபா எழுதி வருகிறார். அதாவது வலது கையில் எழுதும் வார்த்தையை இடது கையையும் பயன்படுத்தி எழுதுகிறார். மாணவியின் இந்த திறனை அறிந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கல்வி நிறுவனம் மங்களூருவுக்கு வந்தது.
பாராட்டு
ஆதிஸ்ரூபாவுக்கு 2 கைகளை பயன்படுத்தி எழுதும் தேர்வை நடத்தியது. இதில் கலந்து கொண்ட அந்த மாணவி ஒரு நிமிடத்தில் இரு கைகளையும் பயன்படுத்தி 45 வார்த்தைகளை எழுதி சாதனை படைத்தார். இதை பார்த்த அந்த குழுவினர் மாணவியை வெகுவாக பாராட்டினர்.
கல்வி பயிற்சி மையம்
ஒரு நிமிடத்தில் இரு கைகளால் 25 வார்த்தைகள் எழுதியதே இதற்கு முன்னர் உலக சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனையை தற்போது ஆதிஸ்ரூபா தகர்த்து உலக சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து ஆதிஸ்ரூபா கூறுகையில் எனது தந்தை, தாய் நடத்தும் கல்வி பயிற்சி மையத்தில் நான் படித்து வருகிறேன்.
பயிற்சி மையம்
10-ஆம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்கள் தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர்தான் பாடங்களை படிப்பர். மற்ற நேரங்களில் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த 10 விரல்களை வைத்து நான் நிறைய சாதனை படைக்கவுள்ளேன் என்றார் ஆதிஸ்ரூபா.