எப்படி அடிக்கிறாங்க.. எங்க நிலைமையை பாருங்க.. மங்களூர் கலவரம்.. ஷாக்கிங் வீடியோ வெளியிட்ட போலீஸ்
மங்களூர்: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கர்நாடக மாநிலம் மங்களூரில் சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களின்போது, எவ்வாறு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டது என்பது தொடர்பான வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
கலவரத்தை ஒடுக்குவதற்காக காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை நடத்திய காவல்துறையினர் மீது கடுமையான விமர்சனங்கள் நாடு முழுக்க கிளம்பின. அதிலும் மருத்துவமனை ஒன்றின் உள்ளே காவல்துறையினர் சென்று கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காட்சி வெளியாகி காவல்துறைக்கு கண்டனங்களை ஈட்டிக் கொடுத்தது.
இந்த நிலையில் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களை தற்போது, மங்களூர் காவல்துறை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. அதில் சிறுவர்களும் கூட, காவல் துறையை நோக்கி கல்வீசி தாக்க கூடிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
முகத்தில் துணி கட்டிக் கொண்டு சாலையோரம் இருந்த சிசிடிவி காமிராக்களை வன்முறையாளர்கள் அடித்து நொறுக்குவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே மங்களூரு நகர காவல்துறை ஆணையர் ஹர்ஷா மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றக்கூடிய போலீசாருக்கு தொலைபேசியில் பல மர்ம நபர்கள் அழைப்பு விடுத்து கொலை மிரட்டல் விடுப்பதாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் இவ்வாறு வந்துள்ளன. சில அழைப்புகள் உள்நாட்டில் இருந்தும், சில அழைப்புகள் வெளிநாட்டில் இருந்தும் கூட வந்துள்ளன. வன்முறையை தடுக்க முற்பட்டால் மரணம்தான் பரிசாக கிடைக்கும் என்று அவர்கள் மிரட்டுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.