மங்களூரில் 2 பேர் போலீசால் சுட்டு கொலை.. பத்திரிக்கையாளர்கள் கைது.. கேமராக்கள் பறிமுதல்.. கெடுபிடி
மங்களூர்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதால், மங்களூரில் இரண்டு பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் அங்கு பத்திரிக்கையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பல பத்திரிக்கையாளர்களின் டிஜிட்டல் கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநில எல்லையோர பகுதி மங்களூர் என்பதால் அங்கு கணிசமான மலையாளிகள் வாழ்ந்து வருகிறார்கள். எனவே இங்கு மலையாள பத்திரிக்கையாளர்களும் கணிசமாக உள்ளனர். காவல்துறையினர் மலையாள, பத்திரிக்கையாளர்களைத்தான் குறிவைத்து கைது செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவரின் குடும்பத்தாரிடம் 'மீடியா ஒன்' என்ற மலையாள செய்தி சேனல் ஒன்றின், நிருபர் பேட்டி எடுத்துக்கொண்டிருந்த போது மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் அங்கே வந்து வீடியோவை ஆப் செய்யும்படி உத்தரவிடுகிறார். மேலும் நிருபரிடம் உங்களது அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் அடையாள அட்டையை காட்டுங்கள் என்று உத்தரவிடுகிறார்.
இதையடுத்து அவர் தனது அடையாள அட்டையை போலீசாரிடம் காட்டியபோது, கோபமடைந்த அந்த அதிகாரி, "இது கிடையாது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஆக்கிரிடிடேஷன் அடையாள அட்டையை காட்டுங்கள், அல்லது இங்கே இருந்து கிளம்புங்கள்" என்று மிரட்டும் தொனியில் உத்தரவிடுகிறார். இவை அனைத்தும் வீடியோவாக பதிவாகியுள்ளன.
வன்முறை வேண்டாம்னுதானே ரஜினி சொன்னார்.. ரசிகர்கள் சப்போர்ட்.. டிரெண்டாகும் #IStandWithRajinikanth
அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் என்ற அடையாள அட்டை ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில அரசுகளால் வழங்கப்படும். இந்த அடையாள அட்டை என்பது ஒவ்வொரு ஊடகத்தில் உள்ள சில குறிப்பிட்ட மூத்த நிருபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
ஊடக குழுமத்திலிருந்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அரசு அமைத்துள்ள குழு ஆய்வு செய்து, அந்த ஊடகத்தின் வாசகர்கள் அளவு, குறிப்பிட்ட பத்திரிகையாளரின் அனுபவ ஆண்டு, போன்ற அனைத்தையும் கணக்கில் எடுத்து அடையாள அட்டை வழங்கும்.
பொதுவாக இதுபோன்ற அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்க கூடிய பத்திரிகையாளர்கள்தான், சட்டசபை, நாடாளுமன்றம் போன்றவற்றுக்கு சென்று செய்தி சேகரிக்க முடியும். பிரதமர், குடியரசுத்தலைவர் போன்றோர் வருகையின்போது செய்தி சேகரிக்கவும் இந்த அடையாள அட்டை கட்டாயம். ஆனால் வன்முறை போன்ற சம்பவங்களின் போது செய்தி சேகரிப்பதற்கு இதுபோன்ற அடையாள அட்டையை மங்களூர் காவல்துறை கட்டாயப்படுத்தி இருப்பது மீடியா சுதந்திரத்தில் தலையிடும் செயல் என்று சர்ச்சை எழுந்துள்ளது.