மும்பையில் முகம் சிதைந்த சடலம்... விரலில் இருந்த அழியாத மை மூலம் துப்பு துலக்கிய போலீஸ்
மும்பையில் முகம் சிதைந்த நிலையில் கிடந்த சடலத்தை கண்டு பிடித்து போலீசார், விரலில் இருந்த ஓட்டு போட்ட அழியாத மையை வைத்து அடையாளம் கண்டு பிடித்துள்ளனர்.
மும்பை: முகம் முழுவதும் சிதைந்த நிலையில் யாரென்றே தெரியாத நிலையில் ஒரு சடலத்தை கடந்த மாதம் முதல் வாரத்தில் மும்பை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த சடலத்தில் இருந்த பி கே என்ற அடையாள டாட்டூவையும், விரலில் இருந்த ஓட்டுப்போட அடையாளமான அழியாத மையை வைத்தும் யாருடைய சடலம், எதற்காக கொலை நடந்தது என்று துப்புத்துலக்கி கண்டு பிடித்துள்ளனர். ஒரு மாதம் மண்டையை பிய்த்துக்கொண்டு தேடியதில் கொலையானவர் யார் என்பதை கண்டுபிடித்து சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கொலையான நபரின் பெயர் கிரன் வான்கடே என்பதாகும். ஒரு பொது கழிவறையில் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டு அடையாளம் காண முடியாத அளவிற்கு கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். யார் இவர், எதற்காக கொல்லப்பட்டார் என்பதை கண்டுபிடிக்க மும்பை போலீஸ் திணறித்தான் போனது.
அந்த சடலத்தின் கையில் ஒரு சிலுவை குறி இருந்தது. பி, கே என்ற இன்சியல் பச்சை குத்தப்பட்டு இருந்தது. விரலில் ஓட்டுபோட்ட அடையாள மை இருந்தது. பிரேத பரிசோதனையில் கனமான கல்லால் கொடூரமாக தாக்கியதால் இவர் மரணம் நிகழ்ந்ததாக தெரியவந்தது.
பணத்திற்காகவா அல்லது வேறு எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது என்று தியோனார் காவல்நிலைய போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் சபியுல்லா குரோஷி, நியாஷ் சவுத்திரி என்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கொலையாளிகளை பிடித்தாகி விட்டது கொலை செய்யப்பட்டவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டுமே அது எப்படி என்று யோசித்தனர்.
நண்பனின் மனைவியை ஆட்டையைப் போட்ட வடிவேலு... விஷம் குடித்து வாழ்க்கையை முடித்த கள்ளக்காதல் ஜோடி
கொலை செய்தவர்களுக்கும் அந்த நபர் யாரென்று தெரியவில்லை. போதையில் இருந்த போது அந்தப்பக்கமாக வந்த நபரிடம் பணம் கேட்டு தகராறு செய்தோம் அவர் கொடுக்க முரண்டு பிடித்தார் நாங்கள் அடித்துகொன்றோம் என்று கூலாக வாக்குமூலம் கொடுத்தனர்.
இதனையடுத்தே கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை அடையாளம் காண்பதில் தீவிரம் காட்டியது போலீஸ். ஓட்டுப்போட அடையாளம்தான் முக்கிய துருப்புச்சீட்டாக இருந்தது. லோக்கல் டிவி சேனல்களில் விளம்பரம் செய்தும் யாரும் அடையாளம் சொல்ல வரவில்லை. கடைசி முயற்சியாக ஓட்டர்ஸ் லிஸ்ட் மூலம் முயற்சிக்கலாம் என்று சிவாஜி நகர், தியோனர் பகுதியில் வசிக்கும் வாக்காளர்கள் 3.5 லட்சம் பேரில் இருந்து கொலையானவர் யார் என்று கண்டுபிடிப்பது சவாலான காரியமாகவே இருந்தது ஆனாலும் அசரவில்லை.
இறந்தது ஆண் என்பதால் பெண்களின் பெயர்களை லிஸ்ட்டில் இருந்து ஒதுக்கினர். சிலுவை குறியீடு இருந்ததால் ஆண்களில் முஸ்லீம் பெயர்களை ஒதுக்கினர். கடைசியாக பி கே என்ற இன்சியல் சடலத்தின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்ததால் அதை வைத்து தேடினர். ஒரு வழியாக கிரன் வான்கடேதான் அந்த சடலத்திற்குரிய நபர் என்று முடிவுக்கு வந்தது போலீஸ்.
பிஎன்ஜிபி பகுதியைச் சேர்ந்த கிரன்வான்கடே வீட்டிற்கு சென்று கதவை தட்டியது போலீஸ். அந்த வீட்டில் இருந்து 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கதவை திறக்கவே போட்டோவை காட்டி அடையாளம் சொல்லச்சொன்னார்கள். அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி, தனது மகனை சில வாரங்களாகவே காணவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார். அது தனது மகனின் சடலம்தான் என்றும் கூறி அழுதார். இதனையடுத்து கிரனின் சடலத்தை அந்த பெண்மணியிடம் ஒப்படைத்தனர். அவரது பெயர் கந்தாபாய் வான்கடே என்று விசாரணையில் தெரியவந்தது.
கிரன் கிருஸ்துவராக இல்லாத நிலையிலும் கையில் சிலுவை போட்டது ஏன் என்று கேட்டதற்கு நண்பர்கள் சேர்ந்து பச்சை குத்தி விட்டதாக கூறினார் அந்த தாய். கே என்பது கிரன், பி என்பது கிரனின் பெண் தோழியின் பெயர் என்றும் கூறி அழுதார். எப்படியோ ஒரு மாதகாலமாக தூக்கத்தை தொலைத்து துப்புத்துலக்கி கொலை செய்யப்பட்ட நபரை கண்டுபிடித்து சடலத்தை உரியவரிடம் ஒப்படைத்தது மும்பை போலீஸ்.
சமீபத்தில் வெளிநாட்டில் அடையாளம் தெரியாத ஒரு இந்தியரின் சடலத்தை அவரது சட்டைப்பாக்கெட்டில் இருந்த சிகரெட் லைட்டரை வைத்து கண்டுபிடித்து கொலையாளியை கைது செய்தனர். இந்த வழக்கில் ஓட்டு போட்ட அழியாத மை துப்புத்துலக்க உதவியுள்ளது.