தூக்கத்திலேயே கருகிய 10 பிஞ்சுகள்.. மனசை பதற வைத்த தீ விபத்து.. ஷாக்கில் மகாராஷ்டிரா.. நடந்தது என்ன?
மகாராஷ்டிராவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துவிட்டன
மும்பை: மகாராஷ்டிரா மாநில ஆஸ்பத்திரியில் இன்று விடிகாலை நடந்த விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. என்ன நடந்தது அந்த ஆஸ்பத்திரியில்..?
மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா மாவட்டத்தில் உள்ளது அந்த அரசு ஆஸ்பத்திரி.. 4 மாடிகளைகொண்டது.. குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும், பிறக்கும் போதே ஏதாவது குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் இந்த ஆஸ்பத்திரியில்தான் சிகிச்சை தரப்படும்.
இதற்காக ஒரு ஸ்பெஷல் வார்டு தனியாகவே உள்ளது. அப்படித்தான், மொத்தம் 17 குழந்தைகள் அந்த வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர்... இந்த குழந்தைகள் எல்லாருமே பிறந்து ஒரு மாசம் முதல் 3 மாசம் வரை உள்ள குழந்தைகள்தான்.. உடம்பில் பிரச்சனை உள்ள குழந்தைகள் என்பதால், ஆக்சிஜன் தரப்பட்டுதான் அவர்களுக்கு சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது.
குழந்தைகள்
இன்று விடிகாலை குழந்தைகள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தன.. மணி 2 இருக்கும்.. அப்போதுதான் திடீரென தீவிபத்து ஏற்பட்டது... குழந்தைகள் வார்டில் இருந்து முதலில் புகை மட்டும் வந்துள்ளது.. இதை நைட் டியூட்டி ஒரு நர்ஸ் பார்த்துள்ளார்.. அவர்தான் உடனடியாக அங்கிருந்த டாக்டர்களுக்கு தகவல் சொன்னார்.. பிறகுதான் அது தீ விபத்து என்றே தெரியவந்தது.. இதையடுத்து, ஆஸ்பத்திரி ஊழியர்கள் வந்து தீயை அணைத்து பார்த்தனர்.. ஆனால், கட்டுக்கடங்காமல் தீ மளமளவென பரவ தொடங்கிவிட்டது.
புகை மூட்டம்
விபரீதத்தை உணர்ந்து பிறகுதான், தீயணைப்பு துறையினருக்கு தகவல் சொன்னார்கள்.. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள் ஆஸ்பத்திரி முழுக்க தீ பரவிவிட்டது.. மொத்தமும் புகை மூட்டமாகிவிட்டது.. எனினும் வீரர்கள் அந்த வார்டில் பற்றி கொண்டிருந்த தீயை அணைத்துவிட்டு, சிகிச்சையில் இருந்த குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்... ஆனால் குழந்தைகளை உடனடியாக மீட்க முடியவில்லை...
மூச்சு திணறல்
புகையால் மூச்சு திணறி அங்கிருந்த 10 குழந்தைகளும் பரிதாபமாக கருகிவிட்டன.. எனினும் 7 குழந்தைகளை மட்டும் காயத்துடன் மீட்க முடிந்தது.. அந்த குழந்தைகள் ஏற்கனவே ஆக்ஸிஜன் வைத்துதான் சுவாசித்து கொண்டிருந்தனர்.. ஆனால் தீயில், அந்த ஆக்சிஸன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன... அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் தீ பரவாத வேறு பகுதிக்கு மாற்றப்பட்டனர்.. உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் சொல்லப்படவும், அவர்கள் பதறி அடித்து கொண்டு ஓடிவந்து, கதறி துடித்தது காண்போரையே கலங்க வைத்தது..
மின்கசிவு
ஆனால், இந்த விபத்து எப்படி நடந்தது என்பதுதான் இதுவரை தெரியவில்லை.. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.. அதிகாலை 2 மணி என்பதால் சிலர் தூக்கத்தில் இருந்தனர். இதனால் தீ விபத்தை உடனே அவர்களால் கவனிக்கவில்லை. ஒருவேளை கவனித்திருந்தால் இன்னும் அதிகப்படியான குழந்தைகளை காப்பாற்றியிருக்க முடியும் என்கிறார்கள். மேலும் தீ விபத்து நடந்தபோது, தொடர்ச்சியாக சிலிண்டர் மற்றும் உபகரணங்கள் வெடித்து கொண்டே இருந்ததாம்.. ஊழியர்களால் அதனால் எல்லா குழந்தையும் காப்பாற்ற முடியவில்லையாம்.
உத்தரவு
இப்போது 10 குழந்தைகள் இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, உடனடியாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் டோபேயுடன் தொடர்பு கொண்டு பேசினார்.. பிறகு இதுகுறித்தும் முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டார்... உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் டோபே அறிவித்துள்ளார்.
மோடி
நடந்த இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். "மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் பச்சிளம் குழந்தைகள் இறந்திருப்பது வேதனை அளிக்கிறது. தீ விபத்தில் விலைமதிப்பற்ற இளம் உயிர்களை இழந்து விட்டோம். தீவிபத்தில் குழந்தைகளை பறிகொடுத்து துயரத்துடன் இருக்கும் பெற்றோர்களை நினைத்து வேதனை அடைகிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைவார்கள் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அதிர்ச்சி
இதுபோலவே, அமித்ஷா முதல் ராகுல்காந்தி வரை தங்களது இரங்கலை பதிவு செய்துள்ளனர்.. ஆஸ்பத்திரியின் கவனக்குறைவு என்பதா? அல்லது எதிர்பாராத விபத்து என்பதா? என்று தெரியவில்லை.. பிஞ்சு குழந்தைகளின் அலறலின் எதிரொலி மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னமும் அடங்கவே இல்லை!