மும்பையில் இடிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டடம்.. பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது
Recommended Video
மும்பை: பொருளாதார தலைநகரான மும்பையில் 4 மாடி கட்டடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.
மும்பை டோங்கிரி பகுதியில் அமைந்திருந்தது 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 4 மாடி கட்டடம் ஒன்று. கடந்த சில நாட்களாகவே மும்பையில் பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இந்த பழமையான கட்டடம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கட்டடத்தில் 15 குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர். சேசாபாரி என்ற பெயர் கொண்டது குறிப்பிட்ட பழமையான கட்டடம். இந்நிலையில் நேற்று அந்த பழமையான 4 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் கட்டடத்திற்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். கட்டட விபத்து பற்றி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கட்டட விபத்து நிகழ்ந்த தெருவானது மிகவும் குறுகலாக இருந்ததால் தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரால் உடனடியாக வாகனங்களுடன் வர இயலவில்லை.
#WATCH National Disaster Response Force (NDRF) carries out search operation with the help of sniffer dogs, at Kesarbhai building collapse site in Mumbai. pic.twitter.com/DAW5js9lCr
— ANI (@ANI) July 17, 2019
பின்னர் சிறிது நேரம் கழித்து மீட்பு பணிகள் துவங்கின 15 குடும்பங்களை சேர்ந்த சுமார் 45-க்கும் மேற்பட்டோர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்பட்டது. தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு படையினர், சுமார் 12 பேரது சடலங்களை நேற்று மீட்டிருந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்
இந்நிலையில் தற்போது இந்த கட்டட விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த இரு சிறுவர்களது உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. இதனிடையே கட்டட இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என மோப்ப நாய் உதவியுடன் கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகிறது.