குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்திற்கு பதில் சானிடைசர்.. மகாராஷ்டிராவில் பெரும் குழப்பம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்திற்குப் பதிலாக சானிடைசர் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நாடு முழுதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
வழக்கமாக இந்தியாவில் ஜனவரி மாதமே போலியோ சொட்டு மருந்து அளிக்கும் பணிகள் நடைபெறும். ஆனால் இந்த முறை கொரோனா தடுப்பூசி பணிகள் காரணமாகப் போலியோ சொட்டு மருந்து அளிக்கும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.
போலியோ முகாம்
நாடு முழுவதும் உள்ள ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாகப் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. கொரோனா சொட்டு மருந்து அளிக்கும் முகாம்களில் சரியான முறையில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. சொட்டு மருந்து கொடுக்கும் பணியிலிருந்த சுகாதார ஊழியர்களின் வெப்ப நிலையும் சோதிக்கப்பட்டன.
சொட்டு மருந்திற்குப் பதில் சானிடைசர்
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் யவத்மல் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு போலியோ முகாமில் சொட்டு மருந்திற்குப் பதிலாக சானிடைசர் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 12 குழந்தைகளுக்கு இவ்வாறு சானிடைசர் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக முகாமில் வைக்கப்பட்டிருந்த சானிடைசர்கள் சொட்டு மருந்துடன் மாறிவிட்டதால் இந்த தவறு ஏற்பட்டுள்ளது.
மூன்று பேர் சஸ்பெண்ட்
இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஐந்து வயதிற்கும் குறைவான 12 குழந்தைகளுக்குச் சொட்டு மருந்திற்குப் பதிலாக சானிடைசர் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இப்போது வரை அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் மருத்துவர், சுகாதார ஊழியர், ஆஷா ஊழியர் என மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் போலியோ முகாம்
கடந்த 10 ஆண்டுகளாகவே இந்தியா போலியோ இல்லாத ஒரு நாடாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் கடைசியா 2011ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி போலியோ கேஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் போலியோ இருப்பதால், சொட்டு மருந்து அளிக்கும் பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.