மழையால் உடைந்த அணை.. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்.. 16 பேர் உடல் மீட்பு! மகாராஷ்டிரா சோகம்
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் ரத்னகிரி அணை உடைந்த விபத்தில் நீரால் இழுத்துச் செல்லப்பட்டவர்களில் இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கொட்டி வருகிறது. மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த பல நாட்களாக ஊற்று ஊற்றென ஊற்றித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
கனமழை காரணமாக நீர்நிலைகள், அணைக்கட்டுகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதேபோல, ரத்னகிரி பகுதியில் உள்ள திவாரே அணை வேகமாக நிரம்பி வந்தது. நேற்று முன்தினம் திடீரென அணையின் ஒரு பகுதி உடைந்து தண்ணீர் குபுகுபுவென வெளியேறியது.
இதனால் அணையின் அருகிலுள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த வீடுகளில் இருந்தவர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
மேலும், அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள 7 கிராமங்களை சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில், இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், மாயமான 8 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா நீர்வளத்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா, ரூ .4 லட்சம் நிதி உதவி அறிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) மற்றும் மாநில காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக, ரத்னகிரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஷால் கெய்க்வாட் தெரிவித்தார். "போலீசார் கிராம மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வைத்துள்ளனர். இப்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது," என்று அவர் கூறினார்.