என்சிபி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியா? போர்க்கொடி தூக்கும் 17 சிவசேனா எம்.எம்.எல்.ஏக்கள்?
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனாவின் 17 எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. 105 இடங்களில் பாஜகவும் 56 இடங்களில் சிவசேனாவும் வெற்றி பெற்றன.
இரு கட்சிகளும் இணைந்து புதிய அரசை அமைத்தால் சமமான அதிகாரப் பகிர்வு தேவை என்கிற நிபந்தனையை சிவசேனா முன்வைத்தது. இதனை பாஜக நிராகரித்ததுடன் ஆட்சி அமைக்க ஆளுநர் விடுத்த அழைப்பையும் மறுத்துவிட்டது.
இதனையடுத்து புதிய அரசு எதுவும் அமைக்கப்படாததால் மகாரஷ்டிராவில் தற்போது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது . அதேநேரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை சிவசேனா மேற்கொண்டது.
இழுத்தடிக்கும் சரத் பவார்.. பொறுமை இழந்த சிவசேனா.. மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜகவை நாட பிளான்!
இதன் முதல் கட்டமாக மூன்று கட்சிகளும் இணைந்து குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கின. மேலும் சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வர் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தற்போது காங்கிரஸ், என்சிபியுடன் இணைந்து ஆட்சி அமைக்க 17 சிவசேனா எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர் என்கின்றன தகவல்கள். இது தொடர்பாக உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் 17 பேரும் நேரம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்களை சந்திக்க உத்தவ் தாக்கரே நேரம் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த 17 பேரும் கர்நாடகா பாணியில் ராஜினாமா செய்வார்களா? அல்லது கூண்டோடு பாஜகவில் ஐக்கியமாவார்களா? என்கிற கேள்விகளுடன் மகாராஷ்டிரா அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகி உள்ளது.