மும்பை கட்டட விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு.. தோண்ட தோண்ட உடல்களால் சோகம்
மும்பை: மகாராஷ்டிராவில் 3 அடுக்குகளை கொண்ட ஒரு கட்டடம் நேற்று அதிகாலையில் இடிந்து விழுந்ததால் அதன் இடிப்பாடுகளில் சிக்கி 20 பேர் பலியாகிவிட்டனர். இன்னும் பலர் இடிப்பாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிராவில் தானேவில் பிவாண்டி என்ற பகுதியில் உள்ளது 3 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு. இங்கு மொத்தம் 40 வீடுகள் உள்ளன. இதில் 150 பேர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த ஜிலானி அடுக்குமாடி குடியிருப்பில் 69ஆவது எண் கொண்ட வீடு 1984ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.20 மணிக்கு கட்டடத்தின் பாதி அளவு சரிந்தது. அதிகாலை என்பதால் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள்.
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 7 சிறுவர்-சிறுமிகள் உள்பட 13 பேரின் உடல்களை மீட்டனர். இதேபோல இடிபாடுகளில் இருந்து 4 வயது சிறுவன், 7 வயது சிறுமி உள்பட 20 பேரை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன் உண்ணாவிரதம்.. ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் திடீர் அறிவிப்பு
இதற்கிடையில் இன்னும் சிலர் கட்டட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், இன்று காலை மேலும் 3 பேரின் உயிரற்ற உடல்களை மீட்புப்படையினர் இடிபாடுகளில் இருந்து மீட்டனர். தற்போது மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.