அதிர்ச்சி.. இந்திய கடற்படை வீரர்களுக்கு பரவிய கொரோனா.. மும்பையில் 21 பேர் மருத்துவமனையில் அனுமதி
மும்பை: இந்திய கடற்படையின் 20 மாலுமிகள் உட்பட 21 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் உள்ள கடற்படை மருத்துவமனையில் மாலுமிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடற்படையில் முதல் முறையாக இந்த பாதிப்பு இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
பரிசோதிக்கப்பட்ட கடற்படையினரின் சரியான எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அந்த சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.
மும்பையில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ் ஆங்க்ரே கப்பலில் உள்ள வீரர்கள்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்பதால், அது வந்த பிறகு, பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.
மேற்கு கடற்படை டிப்போவான ஐ.என்.எஸ் ஆங்கரின் குடியிருப்பு வீட்டு வசதி பகுதியில், இந்த மாலுமிகள் தங்கியிருந்தனர். மும்பை லாக்டவுன் நிலையில் இருந்தாலும், அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த கடற்படை குடியிருப்பு பகுதிக்குள் யார் யார் வந்து சென்றார்களோ, அவர்களை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 3320 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடற்படை மாலுமிகளுக்கு இந்த நோய் பரவியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.