முத்தலாக் தடை சட்டம் இயற்றியும் வாட்ஸ் ஆப்பில் முத்தலாக் அனுப்பிய இளைஞர்.. முதல்முறையாக வழக்கு பதிவு
Recommended Video
மும்பை: முத்தலாக் தடை சட்டம் இயற்றிய பிறகும் வாட்ஸ் ஆப்பில் முத்தலாக் அனுப்பிய இளைஞர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் முத்தலாக்கை எதிர்த்து நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடைச் சட்டம் இயற்றப்பட்டது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த தடை சட்டம் கடந்த புதன்கிழமை நிறைவேறியது.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முத்தலாக் கூறியதாக போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 35 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி திருமணமானது.
இவருக்கும் இவரது மனைவிக்கும் (31) இது இரண்டாவது திருமணம் ஆகும். எனினும் திருமணம் ஆன நாள் முதல் அந்த பெண்ணை கணவரும், மாமனார், மாமியாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக புகார் எழுந்துள்ளது.
அவ்வப்போது கணவர் பணம் கேட்பதால் அந்த பெண்ணின் தந்தை வங்கியில் கடன் பெற்று கொடுத்துள்ளார். இரு சக்கர வாகனத்தையும் வாங்கிக் கொடுத்துள்ளார். எனினும் அந்த பெண்ணை கொடுமைப்படுத்துவதை நிறுத்தவே இல்லை.
இதையடுத்து அந்த பெண் 2017-ஆம் ஆண்டு மத்தியிலிருந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இருவரும் போனிலும் வாட்ஸ் ஆப்பிலும் அவ்வப்போது வாய் தகராறுகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த காலகட்டத்தில் அந்த பெண் கர்ப்பமாக இருந்ததால் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி கணவர்- மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அந்த இளைஞர், தன் மனைவிக்கு வாட்ஸ் ஆப் மூலம் முத்தலாக் கூறியுள்ளார்.
இது குறித்து மும்பை கமிஷனர் அலுவலகத்தை அந்த பெண் நாடியதை அடுத்து அந்த நபர் மீது வழக்கு பதிவானது.