3ஆம் அலை மிக விரைவில் தொடங்கும்.. நடவடிக்கைகளில் அரசியல் இல்லை.. அறிவியல் மட்டுமே.. ஆதித்ய தாக்கரே
மும்பை: மகாராஷ்டிராவில் விரைவில் கொரோனா பரவலின் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அம்மாநிலத்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் சிவசேனா முக்கிய தலைவருமான ஆதித்ய தாக்கரே எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு- ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன்- புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்!
இதில் மகாராஷ்டிரா மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலமாக உள்ளது. அங்கு மட்டும் தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் அம்மாநில அரசு ஊரடங்குக்கு இணையான 144 தடை உத்தரவை அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
இன்று அம்மாநிலத்தின் சுற்றுச்சுழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே என்டிடிவி சொல்யூசன் சம்மிட் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், அதில் கொரோனா பரவல் குறித்து பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார். உத்தவ் தாக்கரே பேசுகையில், தடுப்பூசி நமக்கு உடனடியாக எந்த பலனையும் அளிக்கவில்லை என்றாலும்கூட, வரும் காலத்தில் அது நமக்கு நிச்சயம் பலன் அளிக்கும்.
அரசியல் இல்லை அறிவியல்
கடந்த ஆண்டு கொரோனாவைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட டாஸ்க் ஃபோர்ஸின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே தற்போது முடிவுகள் எடுக்கப்படுகிறது. அனைத்து முடிவுகளும் அறிவியல் மற்றும் மருத்துவ தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை, இதில் அரசியல் எதுவும் இல்லை. கொரோனாவைக் குறைத்துக் காட்டுவதால் எதுவும் நடந்துவிடாது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
மூன்றாம் அலை
மகாராஷ்டிரா தற்போது கொரோனா பரவலின் மூன்றாம் அலையை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. ஆனால், மூன்றாம் அலை வலுவானதாக இருக்கமா அல்லது பலவீனமாக இருக்குமா என தற்போது கூற முடியாது. தற்போது கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஐந்து லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளது. அதில் 70% படுக்கைகளில் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சை அளிக்க முடியும். சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுத்தால் மாநிலத்தில் நிச்சயம் கொரோனா சங்கிலியை உடைக்க முடியும்.
கொரோனா பரவல்
மகாராஷ்டிராவில் சனிக்கிழமை மட்டும் 67,123 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மேலும், ஒரே நாளில் அங்கு 419 பேர் கொரோனாவால் பலியாகியுள்ள நிலையில், ஒட்டுமொத்த உயிரிழப்பு 59,970ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்ற அனைத்தும் வரும் மே 1ஆம் தேதி காலை ஏழு மணி வரை மூடியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது
கடும் நடவடிக்கை
இந்த 144 தடை உத்தரவின் மூலம் மாநிலத்தில் மக்களின் நடமாட்டத்தை நிறுத்த முடியும் என்றும் இதன் மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அம்மாநில உள் துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா விதிமுறைகளை முறைாக பின்பற்றாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.