பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க 45 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ரெடியாம்.. பாஜக எம்பி சஞ்சய் காகடே
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க 45 சிவசேனா எம்.எல்.ஏக்கள் தயாராக உள்ளதாக பாஜக ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் காகடே தெரிவித்துள்ளது அம்மாநில அரசியலில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 105, சிவசேனா 56 இடங்களின் வென்றன. தேர்தலுக்கு முன்னரே இரு கட்சிகளும் தொகுதிகள் மற்றும் அதிகாரத்தை சரிசமமாக பங்கிடுவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் சட்டசபை தேர்தலின் போது பாஜக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டது சிவசேனாவை அதிருப்தி அடைய வைத்தது. இந்நிலையில் சிவசேனா ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது.
சிவசேனாவோ, அதிகாரத்தை சரி சமமாக பகிர வேண்டும் என நிபந்தனை விதித்திருக்கிறது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி அல்லது முக்கிய அமைச்சரவை பதவிகள் வழங்க வேண்டும் என்பதில் சிவசேனா உறுதியாக இருக்கிறது.
வேலை நிறுத்தம்- அரசு மருத்துவர்களுக்கு எதிராக பணிமுறிவு நடவடிக்கை- சுகாதாரத்துறை எச்சரிக்கை
இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி இருந்து வருகிறது. இந்நிலையில் பாஜகவின் ராஜ்யசபா எம்பியாக சஞ்சய் காகடே, டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், 56 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் 45 பேர் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கவே விரும்புகின்றனர். அந்த 45 எம்.எல்.ஏக்கள் எங்களை அழைத்து அரசில் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டு வருகின்றனர் என கூறியிருந்தார்.
அவரது இந்த பேட்டி மகாராஷ்டிரா அரசியலில் கூடுதல் பரபரப்பை கிளப்பியது. இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சஞ்சய் காகடே, சிவசேனாவின் 45 எம்.எல்.ஏக்கள் பாஜக, சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்கவே விரும்புவதாக தாம் கூறியதாக விளக்கம் அளித்திருக்கிறார்.