போலீஸ் ஸ்டேசனில் கூத்து.. கைதிக்கு கேக் வெட்டி.. ஹேப்பி பர்த்டே பாடிய போலீஸ்கார்கள்.. சஸ்பெண்ட்
மும்பை: காவல்நிலையத்தில் கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்டவரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய 5 போலீஸ்காரர்கள் மும்பையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் பந்தூப் என்ற காவல் நிலையம் உள்ளது. இங்குள்ள போலீசார் ஆள் கடத்தல் மற்றும் அடிதடி வழக்கில் அயான் கான் என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்ட அயான் கானுக்கு அன்று பிறந்த நாள் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அவரின் பிறந்த நாளை கொண்டாட போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன்படி கேக் வரவழைக்கப்பட்டது. அந்த கேக்கை கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்ட அயான் கான் வெட்ட அவருடன் சேர்ந்து ஹேப்பி பர்த்டே பாடி, போலீசார் கேக்கை சாப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.
கைதிக்கு போலீசார் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ வைரலாகிய நிலையில் மும்பை உயர் போலீஸ் அதிகாரிகள் விசாணை நடத்தினர். இதன்பின்னர் அந்த போலீஸ் ஸ்டேசனில் அன்று பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர்கள் பங்கஜ் சாவ்லே மற்றும் சச்சின் கோகரே, ஹெட் கான்ஸ்டபிள் கோசல்கார், மற்றும் கான்ஸ்டபிள்கள் அனில் கெய்க்வாட், மாருதி ஜூமாடே ஆகிய 5 பேரையும் உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர்.
முதல்கட்ட விசாரணையில் பந்தூப் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் இரவு டூட்டி பார்த்துள்ளார். ஆனால் அங்கிருந்த சீனியர் இன்ஸ்பெக்டர் ஒழுங்காக மேற்பார்வை செய்யாததோடு கட்டுபாடு இல்லாமல் செயல்படவிட்டுள்ளார் என உயர்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஆள் கடத்தல் மற்றும் அடிதடி வழக்கில் அயான் கானுக்கு எதிராக எந்த ஆதரமும் இல்லை என போலீசார் அறிக்கை தாக்கல் செய்ததால், நீதிமன்றம் அவரை குற்றமற்றவர் என விடுதலை செய்தது.