50% மேல் அனுமதி இல்லையாம்.. இறுதிச் சடங்கில் 20 பேர்.. மீண்டும் அமலான கட்டுப்பாடுகள்.. ஐயோ!
நாக்பூர்: கொரோனா அதிகரிப்பதைத் தொடர்ந்து, நாக்பூரில் மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. எந்நேரமும் அங்கு மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படும் சூழல் நிலவுவதால், மக்கள் பீதியில் உள்ளனர்.
கடந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும், மகாராஷ்டிராவில் 3,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் புதிய கேஸ்கள் 14 சதவீதம் அதிகரித்தன.
கடும் கட்டுப்பாடு
இதனால் மும்பையில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, இன்று (பிப்.19) நாக்பூரிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஹோட்டல்களில் 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் ஒரு கட்டிடத்தில் 5 பேருக்கு மேல் கொரோனா தொற்று இருந்தால், அந்த கட்டிடம் சீல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறுதிச் சடங்கு நிகழ்வில் 20 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 பேர் மரணம்
நாக்பூரில் நேற்று (பிப்.18) மட்டும் 644 புதிய கோவிட் -19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,41,028 ஐ எட்டியுள்ளது. நேற்று 6 நோயாளிகள் தொற்றுநோயால் இறந்தனர். அதேசமயம், 250 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
75 நாட்களுக்குப் பிறகு
75 நாட்களுக்குப் பிறகு, மகாராஷ்டிராவில் நேற்று 5,000 க்கும் மேற்பட்ட புதிய கோவிட் -19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் கணிசமான எண்ணிக்கையானது அகோலா மற்றும் நாக்பூர் பிரிவுகளில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 5,427 புதிய பாதிப்புகளுடன், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,81,520 ஆக உயர்ந்தது. 38 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 51,669 ஆக உயர்ந்துள்ளது.
அகோலா
கடந்த வாரம் முதல், தினசரி நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து அரசு எச்சரிக்கை மணி அடித்து வருகிறது. "5,427 புதிய பாதிப்புகளில், 38 சதவீதம்.. அதாவது, 2,105 பாதிப்புகள் அகோலா மற்றும் நாக்பூர் பிரிவுகளில் இருந்து பதிவாகியுள்ளன. அகோலா பிரிவில் மட்டும் 1,258 பாதிப்புகள், அமராவதி மாநகராட்சியில் 542 மற்றும் அமராவதி மாவட்டத்தில் மட்டும் 191 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.