மகாராஷ்டிராவில் கனமழை... அணை உடைந்தது... 6 பேர் சடலமாக மீட்பு
மும்பை: மகாராஷ்டிராவில் கனமழையால் அணை உடைந்து 12 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி இறந்து போன 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு பருவமழை எதிரொலியாக, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடர்ந்து 5 வது நாளாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பல இடங்களிலும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில்,பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாலைகள் தெரியாத அளவுக்கு வெள்ளக்காடாக மாறி உள்ளன. சாலை, ரயில், விமான போக்குவரத்தும் முடங்கி விட்டது. மும்பை தவிர மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ரத்னகிரியில் உள்ள திவாரே அணை வேகமாக நிரம்பி வந்த நிலையில், நேற்று இரவு திடீரென அணையின் ஒரு பகுதி உடைந்து தண்ணீர் வெளியேறியது.
6 bodies recovered till now after Tiware dam in Ratnagiri was breached. Rescue operations continue. 12 houses near the dam have been washed away. #Maharashtra pic.twitter.com/vkr71LBPCn
— ANI (@ANI) July 3, 2019
அதனை சரி செய்வதற்குள், பெரும் வெள்ளம் ஏற்பட்டு, அணையின் அருகில் இருந்த 12 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. அந்த வீடுகளில் இருந்தவர்களைக் காணவில்லை. இதுதவிர அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள 7 கிராமங்களை சூழ்ந்துள்ளது.
#WATCH: Tiware dam in Ratnagiri was breached earlier today. 6 bodies have been recovered till now. Rescue operations continue. 12 houses near the dam also washed away. #Maharashtra pic.twitter.com/mkgLaruaau
— ANI (@ANI) July 3, 2019
பேரிடர் மீட்புப் படையினர், மாவட்ட அதிகாரிகள், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 6 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 20 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
இதற்கிடையே, போலீசார் தரப்பில் கூறுகையில், நேற்று மாலைக்கு பிறகு அணையில் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது. அதன் பின்னர், அணையை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்குள் விரிசல் அதிகமாகி உடைந்து, கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.