மகாராஷ்டிராவில் 60% அமைச்சர்களுக்கு தொற்று.. கோர தாண்டவமாடும் கொரோனா
மும்பை: உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கத்தில் கிட்டத்தட்ட 60 சதவீத அமைச்சர்கள் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 வைரஸின் இரண்டாவது அலை அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று (பிப்.22) காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் 6, 971 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 35 பேர் உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது. மேலும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக அங்கு தினமும் 6000க்கும் மேல் புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த மோசமான சூழலால், அனைத்து வகையான பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். அரசியல் சார்ந்த பொதுக்கூட்டங்கள், சமூக, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மூத்த என்.சி.பி தலைவரும் மகாராஷ்டிராவின் உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சருமான சாகன் பூஜ்பாலுக்கு, நேற்று (பிப்.22) கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 60 சதவீத அமைச்சர்கள் இதுவரை வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த வாரம் மட்டும்
கடந்த ஆண்டு கோவிட் -19 வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து, மகாராஷ்டிர அரசில் உள்ள 43 அமைச்சர்களில் 26 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்மையில், கடந்த வாரத்தில் ஐந்து அமைச்சர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இரண்டாவது முறையாக
பூஜ்பால் தவிர, நீர்வளத்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல், உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைச்சர் டாக்டர் ராஜேந்திர ஷிங்னே மற்றும் சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் ஆகியோருக்கு கோவிட் -19 உறுதி செய்யப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஓம்பிரகாஷுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டது.
ஏழு அமைச்சர்கள்
குறிப்பாக, மகாராஷ்டிரா அரசின் கூட்டணி கட்சிகளில், காங்கிரஸ் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, 16 அமைச்சர்களில் 13 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸில் ஏழு அமைச்சர்களுக்கும், சிவசேனாவில் ஐந்து அமைச்சர்களுக்கும், ஒரு தனி அமைச்சருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
பெரிய லிஸ்ட்
பாதிக்கப்பட்ட அமைச்சர்களில் துணை முதல்வர் அஜித் பவார், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், வீட்டுவசதித் துறை அமைச்சர் ஜிதேந்திர அவாத், சமூக நீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே, தொழிலாளர் அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல், எஃப்.டி.ஏ அமைச்சர் ராஜேந்திர ஷிங்னே, ஊரக வளர்ச்சி அமைச்சர் ஹசன் முஷ்ரிப், கூட்டுறவுத் துறை அமைச்சர் பாலாசாகேப் பாட்டீல் மற்றும் மோ.எஸ்.சஞ்சய் பன்சோட் மற்றும் பிரஜகத் டான்பூர் ஆகியோர் அடங்குவர்.
கவலையில் சிவசேனா
காங்கிரஸ் அமைச்சர்கள் அசோக் சவான் (பி.டபிள்யூ.டி), நிதின் ரவுத் (எரிசக்தி) அஸ்லம் ஷேக் (டெக்ஸ்டைல்ஸ்), வர்ஷா கெய்க்வாட் (பள்ளி கல்வி) மற்றும் சாதேஜ் பாட்டீல் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதேபோல், சிவசேனாவிலிருந்து, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, போக்குவரத்து அமைச்சர் அனில் பராப், வேளாண் அமைச்சர் தாதா பூஸ், உயர்கல்வி அமைச்சர் உதய் சமந்த் ஆகியோரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.