மகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. 7 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் நலசோபராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் 7 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிராவில் கொரோனாவின் முதல் அலையை விட மிகவும் ஆக்ரோஷமாக இரண்டாவது அலை பதம் பார்த்து வருகிறது. நாள்தோறும் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதனால் அந்த மாநிலத்தில் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பால்கர் மாவட்டத்தில் வாசை விரார் மாநகராட்சிக்குள்பட்ட நலசோபராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
மூச்சுத்திணறலுடன் வரும் நோயாளிகள் அந்த தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 7 பேர் உயிரிழந்துவிட்டனர். இவர்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் புகார் கூறுகிறார்கள். ஆனால் வாசை விரார் மாநகராட்சி அதிகாரிகளோ அவர்கள் இறப்பிற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமல்ல. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதே ஆபத்தான கட்டத்தில் இருந்தார்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.