4 பெண்கள் உட்பட 7 பேர் பலியான பரிதாபம்... மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
Recommended Video
மும்பை: மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பையின் புறநகரான செம்பூர் பகுதியில் உள்ள சர்கம் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 14 வது தளத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஒரு தளத்தில் பற்றிய தீ, காற்றின் வேகம் காரணமாக சிறிது நேரத்தில் மற்ற தளங்களுக்கு, மள, மளவென பரவியது.
7 பேர் உயிரிழப்பு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் 8 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புபடை வீரர்கள், தீயை கட்டுப்படுத்த போராடினர். மேலும், வீட்டினுள் மாட்டிக்கொண்ட மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணி மறுபக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. இதில், சிலர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பெண்கள் உள்பட 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 2 பேர் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
சுவர் இடிந்தது
பல மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் மற்ற தளங்களில் கடுமையான வெப்பம் நிலவியதால் தண்ணீர் பீய்ச்சியடித்து குளிர்விக்கும் பணிகள் நடைபெற்றன. கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன.
தீயணைப்பு வீரர் காயம்
இதற்கிடையே, பணியின் போது, தீயணைப்பு வீரர் ஒருவரும் காயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம்
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனாலும், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தீ விபத்தின் போது, வீட்டில் இருந்த சிலிண்டர் ஒன்று வெடித்து சிதறியதால் தான் பெரிய ஆபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.