இந்தியாவில் ஓமிக்ரான் 21 பேருக்கு பாதிப்பு: மகாராஷ்டிராவில் 7, ராஜஸ்தானில் 9 பேருக்கு தொற்று உறுதி
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 7 பேருக்கும் ராஜஸ்தானில் 9 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் ஏழு பேருக்கும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 9 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை ஓமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
ஓமிக்ரான் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. B 1.1 529' எனும் புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த நவம்பர் 25 அன்று தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கொரோனா வைரஸிலிருந்து ஏறத்தாழ 30க்கும் அதிகமான முறை மரபியல் மாற்றமடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஓமிக்ரான் தொற்று அதிகரிப்பு எதிரொலி... அமெரிக்கா, இங்கிலாந்தில் புதிய கட்டுப்பாடு
இந்த வைரஸ் இதுவரை 40 நாடுகளுக்குப் பரவியிருப்பதாகவும், மற்ற நாடுகளைப் பாதிக்கும் எல்லா சாத்தியக்கூறுகளும் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இந்தியாவில் பரவல்
கொரோனா வைரசின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் குறித்த செய்தி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த இருவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடும் கட்டுப்பாடு
இந்த நிலையில் ரிஸ்க் நாடுகள் எனக் கூறப்படும் தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு 45 நிமிடங்களில் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. முடிவுகள் நெகட்டிவ் வந்தால் மட்டுமே அவர்கள் மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
குஜராத்தில் ஒருவருக்கு உறுதி
இதனிடையே குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் ஜிம்பாப்வேயில் இருந்து திரும்பிய ஜாம்நகரைச் சேர்ந்த 72 வயது முதியவருக்கு நேற்று கோவிட்-19 இருப்பது உறுதியானது. அவருக்கு ஓமிக்ரான் மாறுபாடு சோதனை செய்யப்பட்டதில் ஓமிக்ரான் தொற்று உறுதியானது.
ஓமிக்ரான் பரவல்
இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதே போல தான்சானியாவிலிருந்து டெல்லி திரும்பிய விமான பயணி ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. டெல்லி வந்த பயணி தற்போது எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் 8 பேர்
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஓமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 பேராக உயர்ந்துள்ளது.
12 பேருக்கு பாதிப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மேலும் 9 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ஓமிக்ரான் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 21 பேராக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு இல்லை என்று மாநில மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.