அரசு அபகரித்த நிலம்...6 ஆண்டுகள் ஆர்ப்பாட்டம்...உயிரை விட்ட 70 வயது பெண்!!
மும்பை: கடந்த 6 ஆண்டுகளாக தனது சொந்த நிலத்திற்கு மகாராஷ்டிரா அரசிடம் இருந்து நஷ்ட ஈடு கோரி மும்பையில் இருக்கும் ஆசாத் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த 70 வயது பெண் விமல் பதேகர் உயிரிழந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் தனது கணவரையும் இழந்தார்.
மும்பை மாநகராட்சியில் இருக்கும் ஆசாத் மைதானத்தை தினமும் கடந்து சென்றவர்களுக்கு இவர் நிச்சயமாக நன்றாக பரிட்சயம் ஆகி இருக்க வேண்டும். இவர் தனது மகன் தத்தாத்ரே, கணவர் மோகனுடன் 6 ஆண்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தார். இவரது கணவர் மோகன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பினால் இதே இடத்தில் உயிரிழந்தார். தத்தாத்ரே சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளார்.
இவரது கோரிக்கை, சங்கிலியில் இருக்கும் முன்னோர்களின் நிலத்தை அரசு எடுத்துக் கொண்டது. அதற்கு நஷ்ட ஈடாக ரூ. 2,600 கொடுக்க வேண்டும் என்பதுதான். ஆசாத் மைதானத்துக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த இவர்களை போலீசார் கடந்த திங்கள் கிழமை வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளனர். ஆசாத் மைதானத்துக்கு வெளியே தனது மகனுடன் அடைக்கலம் அடைந்தார்.
இந்த நிலையில் அன்றே தனது தாய் எந்த சலனமும் இல்லாமல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் தத்தாத்ரேயா. பின்னர் போலீசார் உதவியுடன் ஜெஜெ மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். செல்லும் வழியிலேயே விமல் பதேகர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். அவரது இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தெரியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விமல் பதேகரின் மகன் தத்தாத்ரேயா கூறுகையில், ''சங்கலியில் மிராஜ் ரோட்டில் எனது கொள்ளு தாத்தாவின் 3.5 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த இடத்தில் சிறிய நிலத்தை ரயில்வே பாதை அமைக்க 1881ல் பிரிட்டிஷ் அரசு எடுத்துக் கொண்டது. இதற்குப் பின்னர் மீதம் இருந்த நிலத்தை மாநில அரசு எடுத்துக் கொண்டது. இதற்கு இழப்பீடு கோரியும் இதுவரை அரசு செவி சாய்க்கவில்லை'' என்றார்.
அதற்கான ஆவணங்களையும் தத்தாத்ரேயா வைத்துக் கொண்டுள்ளார். நாள் முழுக்க ஆசாத் மைதானத்துக்குள் இருக்கும் இவர்கள் மாலை 6 மணிக்கு மேல், சிஎஸ்டி ரயில் நிலையத்துக்கு சென்று படுத்துக் கொள்வார்கள். இதற்காக ரயில்வே நிர்வாகத்திடம் தத்தாத்ரேயா அனுமதி பெற்றுள்ளார். மசூதியில் இருந்தும், சக ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்தும் இவர்களுக்கு தினமும் உணவு கிடைத்துள்ளது.
அலாஸ்காவின் நகரங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை ரத்து
இவரது தந்தை மோகன் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டு இருக்கும்போதே மாரடைப்பில் இறந்துள்ளார். இவரை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு சென்று ஈமக் கடமைகளை செய்து முடித்து, 15நாட்கள் கழித்து மீண்டும் ஆசாத் மைதானத்துக்கு தனது தாயுடன் தத்தாரேயா வந்துள்ளார். தனது தாயின் உடலை தஸ்காவனில் அடக்கம் செய்ய முடிவு செய்து இருப்பதாக தத்தாத்ரேயா கூறுகிறார். ஆர்ப்பாட்டத்தில் தனது தந்தை, தாய் இருவரையும் இழந்த தத்தாத்ரேயாவுக்கு இதுவரை யாரும் செவி சாய்க்கவில்லை.