ஐஎஸ்ஐஎஸ்ஸுடன் தொடர்பு.. மகாராஷ்டிராவில் 17 வயது சிறுவன் உள்பட 9 பேர் கைது
மும்பை: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 17 வயது சிறுவன் உள்பட 9 பேரை மகாராஷ்டிர போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஔரங்காபாத்தில் பதுங்கி இருந்த இந்த 9 பேரை மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் 9 பேரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் குறித்து மும்பை பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு துப்பு கிடைத்தது. இதையடுத்து பல நாட்களாக இவர்கள் 9 பேரையும் கண்காணித்து வந்துள்ளனர். சந்தேகத்துக்கு உரிய வகையில் அவர்களின் நடவடிக்கை இருந்ததை அடுத்து, அவுரங்காபாத்தில் 9 பேரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
திங்கள்கிழமையன்று மும்பை, அவுரங்காபாத்தின் கைசார் காலனி, ரஹத் காலனி மற்றும் டாம்டி மஹால், அம்ருத் நகர், கௌசா, மோதி பாக் மற்றும் ஆல்மாஸ் காலனி பகுதிகளில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது இவர்கள் சிக்கினர்.
இவர்களிடமிருந்து அமில பாட்டில்கள், கூர்மையான கத்திகள், மொபைல் ஃபோன்கள், ஹார்ட் டிஸ்குகள் மற்றும் சில சிம் கார்டுகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களின் அடையாளம் வெளியிடப்படவில்லை 9 பேரில் ஒருவருக்கு வயது 17 என்றும் மற்றவர்களுக்கு 20 முதல் 25 வயதுக்குள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.