கொரோனா கோரத் தாண்டவம்.. மகாராஷ்டிராவில் ஒருவர் சாவு.. இந்தியாவில் மொத்த பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு
மும்பை: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற முதியவர் ஒருவர் மகாராஷ்டிராவில் மரணமடைந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு வேகம் என்பது இந்தியாவில் அதிகரித்து வருகிறத. தினமும் சராசரியாக 10 க்கும் மேற்பட்டோர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்து இருந்தது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கஸ்தூரிபா மருத்துவமனையில் கொரோனா தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவர் இன்று மரணமடைந்துள்ளார்.
இவர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று விட்டு இந்தியா வந்திருந்த நிலையில் நோய்தொற்றுக்கு உள்ளாகி இருந்தார். இவருக்கு வேறு சில உடல்நல உபாதைகளும் இருந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கர்நாடக மாநிலம் கல்புர்கியை சேர்ந்த 80 வயதுக்கு மேற்பட்ட ஒரு முதியவரும், டெல்லியில் சிகிச்சை பெற்றுவந்த 68 வயது மூதாட்டியும், கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்தத நிலையில், மகாராஷ்டிராவில் ஒரு பலி பதிவாகியுள்ளது. ஆகமொத்தம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானவர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
இந்தியாவை பொருத்த அளவில், மகாராஷ்டிராவில்தான் அதிகப்படியான நோயாளிகள் எண்ணிக்கை காணப்படுகிறது. மகாராஷ்டிராவில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் 22 பேருடன் கேரளா இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது