பாம்புக்கு ஆணுறை மாட்டிவிட்ட கொடூரக்காரர்கள்.. உயிருக்கு போராடிய பாம்பு.. மும்பையில் கொடூரம்!
மும்பையில் பாம்புக்கு ஆணுறை மாட்டிவிட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை: மும்பையில் முகத்தில் ஆணுறை மாட்டியதால் மூச்சுவிட சிரமப்பட்டு, உயிருக்கு போராடிய பாம்பை சமூக ஆர்வலர்கள் பத்திரமாக மீட்டனர்.
மும்பையின் கிழக்கு பகுதியில் உள்ள கண்டிவலியில் உள்ள கிரீன் மெடோஸ் குடியிருப்பு பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு பாம்பு ஒன்று வித்தியாசமாக ஊர்ந்து சென்றது. அந்த பாம்பு ஏதோ சிக்கலில் இருக்கிறது என்பதை உணர்ந்த அக்குடியிருப்புவாசி ஒருவர் உடனடியாக மிதா மல்வங்கர் எனும் பாம்புபிடி நிபுணருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மிதா பாம்பின் முகத்தில் பிளாஸ்டிக் உறை மாட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த பாம்பை பிடித்தபோது, அதின் முகத்தில் மாட்டியிருந்தது, பயன்படுத்தப்பட்ட ஆணுறை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆணுறையை லாவகமாக அகற்றி பாம்பின் உயிரை காப்பாற்றினார் மிதா.
பிறகு அந்த பாம்பை போரிவாலியில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் மிதா ஒப்படைத்துவிட்டார். மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வனப்பகுதியில் விடப்பட்டது.
"இந்த பாம்பு விஷத்தன்மையற்ற ஒரு வகை தண்ணீர் பாம்பு தான் என்றாலும், இதன் கடி வலி மிகுந்ததாக இருக்கும். காரணம் இந்த பாம்பின் பற்கள் ஊசி போன்று இருக்கும். கடிப்பட்ட பிறகு வெகு நேரம் வலி இருக்கும். எனவே பாம்பு பிடிப்பதில் கைத்தேர்ந்த யாரோ ஒருவர் தான் இந்த கொடூரத்தை செய்திருக்கிறார். பாம்பு தானாக ஆணுறையில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவே", என்கிறார் மிதா.
கடையில் திருடியவர்களுக்கு பண உதவி.. இதல்லவோ மனிதாபிமானம்.. போலீஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டு
எதற்காக இப்படி பாம்பை பிடித்து அதன் முகத்தில் ஆணுறையை மாட்டி விட்டார்கள் என்பது தெரியவில்லை. விஷத்தன்மையற்ற வாயில்லா ஜீவனுக்கு இந்த கொடூரத்தை செய்தது யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என கண்டிவலி பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.