மனைவி கையால் தாலி.. மாற்றி யோசித்த ஷர்துல்.. மோசமாக டிரோல் செய்யும் நெட்டிசன்கள்!
மணப்பெண் கையால் தாலி கட்டிக் கொண்ட மணமகனை இணையத்தில் மோசமாக டிரோல் செய்து வருகின்றனர்.
மும்பை : சமத்துவத்தை போதிக்கும் வகையில் ஆண் ஒருவர் தனது திருமணத்தில் பெண்ணுக்கு இணையாக தாலி அணிந்து கொண்ட வித்தியாசமான திருமணம் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
இந்தியாவில் தாலி செண்டிமெண்ட் என்பது மிக முக்கியமான செண்டிமெண்டாகும். குறிப்பாக இந்து மதத்தை சேர்ந்த பெண்களுக்கு தாலி என்பது மிக புனிதமானதாகக் கருதப்படுகிறது. எனவே தான் தாலி செண்டிமெண்டை வைத்து பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு, அவை மிகப் பெரிய வெற்றியும் பெற்றுள்ளன.
ஆனால் தாலி என்பது பெண்களை அடிமைப்படுத்தும் ஒரு சாதனம் என முற்போக்கு சிந்தனையாளர்கள் கூறுகின்றனர். எனவே தான் தந்தை பெரியார் தாலி பயன்படுத்தாத சுயமரியாதை திருமணங்களை ஊக்குவித்தார். இந்த திருமணங்களில் மணமக்கள் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டு, தங்களது இல்லற வாழ்வை தொடங்கிவிடுவர்.
அடடே.. இங்க பாருங்க.. ஜெயலலிதாவுக்கு பிடித்தமான.. விநாயகர் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு மரியாதை!
அந்த வகையில் ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் மணமகன் ஒருவர் தனது திருமணத்தில் மணமகளின் கையால் தாலி கட்டிக்கொண்டிருக்கிறார். பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இந்த விநோத திருமணம் பலரையும் புருவம் உயர்த்த வைத்துக்கிறது.
நட்பு காதலானது
மும்பையைச் சேர்ந்தவர்களான தனுஜாவும், ஷர்துலும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். படிப்பை முடிக்கும் வரையில் அவர்களுக்கு இடையே காதல் எதுவும் மலரவில்லை. 4 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் எதேர்ச்சையாக இருவரும் சமூகவலைதளம் மூலம் மீண்டும் பேச தொடங்கினர். இது நாளிடைவில் காதலாக மாறியது.
வித்தியாசமான யோசனை
பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் கடந்தாண்டு கொரோனா முதல் அலையின் போது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். சமத்துவத்தை விரும்பும் ஷர்துலுக்கு திருமணத்தின் போது தானும் தாலிக்கட்டி கொள்ளலாம் என யோசனை தோன்றியிருக்கிறது. ஆனால் இதற்கு இருதரப்பு உறவினர்களும் சம்மதிக்கவில்லை. இருப்பினும் தனது முடிவில் உறுதியாக இருந்தார் ஷர்துல்.
தாலி கட்டிய மணப்பெண்
அதன்படி கடந்தாண்டு டிசம்பரில் நடந்த அவர்களது திருமணத்தின் போது உறவினர்கள் விருப்பத்தின் பேரில் முதலில் தனுஷாவிற்கு தனது கையால் ஷர்துல் தாலி கட்டினார். பின்னர் தான் கட்டியது போன்றே தாலி ஒன்றை தனுஜா கையால் தானும் கழுத்தில் கட்டிக்கொண்டார். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் இதைக் கண்டு ஆச்சரியப்பட்டு போயினர்.
வைரலான புகைப்படங்கள்
சமீபத்தில் தனது திருமணப் புகைப்படங்களை ஷர்துல் - தனுஜா தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். அதில் தான் தாலி கட்டிக் கொண்ட கதையையும் ஷர்துல் பதிவு செய்திருந்தார். இதனால் அவர்களது திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்தப் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் ஷர்துல் -தனுஷாவின் இந்த புரட்சிகரமான செயலைப் பாராட்டியுள்ளனர்.
மோசமான டிரோல்
ஆனால் வேறு சில நெட்டிசன்களோ இது தொடர்பாக ஷர்துலை கடுமையாக டிரால் செய்து வருகின்றனர். "தாலி கட்டிக்கொண்டால் போதுமா? அப்படியே ஒரு புடவையும் கட்டிக்கோ", "உனக்கென்ன மனநிலை பாதிப்பா முதலில் ஒரு நல்ல மருத்துவரைச் சென்று பார்" என்பது போன்ற மோசமான கமெண்ட்டுகளை அவர்கள் ஷர்துலுக்கு எதிராக பதிவு செய்துள்ளனர். ஆனால் இது எதையும் ஷர்துல் கண்டு கொள்ளவில்லை.
ஆதரவுக் குரல்
தான் செய்த காரியத்தில் அவர் மிக பெருமை கொண்டிருப்பதாகவே தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். ஆனால் நெட்டிசன்களின் டிரோலால் மணமகள் தனுஜா தான் கொஞ்சம் கலங்கிபோய்விட்டாராம். தற்போது இந்த தம்பதிக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருவதால் தனுஜா சற்று ஆறுதலடைய தொடங்கியிருக்கிறார்.