சத்ரபதி சிவாஜியுடன் பிரதமர் மோடியை ஒப்பிடும் பாஜக தலைவரின் புத்தகம்- வெடித்தது சர்ச்சை
மும்பை: பிரதமர் நரேந்திர மோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு பாஜக தலைவர் ஜெய் பகவான் கோயல் புத்தகம் வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நரேந்திர மோடி- இன்றைய சிவாஜி என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் நூலாசிரியரான பாஜகவின் ஜெய் பகவான் கோயல், டெல்லி பாஜக தலைவரான எம்.பி. மனோஜ் திவாரி, பாஜக தேசிய துணைத் தலைவர் ஷ்யாம் ஜாஜூ, முன்னாள் எம்.பி. மகேஷ் கிரி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதளங்களில் இப்புத்தகத்தை ஜெய் பகவான் கோயல் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இப்புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் இப்புத்தகத்தால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் தமது ட்விட்டர் பக்கத்தில், சத்ரபதி சிவாஜியின் வாரிசுகளான ராஜ்யசபா எம்.பி. சத்ரபதி சாம்பாஜி மகாராஜ், முன்னாள் எம்.பி. சதாரா சத்ரபதி உதயன் ரேய் ஆகியோர் பாஜகவில் உள்ளனர். சிவாஜியை மோடியுடன் ஒப்பிட்டதை சிவாஜியின் வாரிசுகளான அவர்கள் ஏற்கிறார்களா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிரா வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திரா ஆவாதும் தமது ட்விட்டர் பக்கத்தில், சத்ரபதி சிவாஜி என ஒருவர்தான் இருக்க முடியும். இன்னொருவரை சத்ரபதி சிவாஜியாக நாங்கள் ஏற்க முடியாது என கூறியுள்ளார்.
குடிக்க பணம் தர மறுப்பு.. ஆடிட்டரை வெளுத்து வாங்கிய இளைஞர்கள்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!