என்னை கேக்காம ஏன் பெத்தீங்க.. அப்பா, அம்மா மேல கேஸ் போட போறாராம்.. இப்படியும் ஒரு மகன்
தன்னை ஏன் பெற்றீர்கள் என கேட்டு பெற்றோர் மீது மகன் வழக்கு தொடுக்க போகிறார்.
மும்பை: "அது எப்படி என்னை கேக்காமலேயே என்னை பெத்துக்கலாம்" என்று கேட்டு இளைஞர் ஒருவர் பெற்றோர் மீது கேஸ் போடப் போகிறாராம்.
மும்பையை சேர்ந்த இளைஞர் ரபேல் சாமுவேல். 27 வயதாகிறது. மக்கள் தொகை அதிகமாவதை எதிர்ப்பவர். ஒரு உயிர் பிறந்து பூமிக்கு தேவையில்லாத சுமையை ஏற்படுத்துவது என்று நினைப்பவர்.
அதனால் தன் பிறப்பையே அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், "என் பெற்றோரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் என் சம்மதம் இல்லாமல் எப்படி பெற்றோர் என்னை பெற்று கொள்ளலாம்? இது குற்றம்.
வைரல் பதிவு
ஆனால் அவங்க ரெண்டு பேரும் சுகத்துக்காக என்னை பெற்றெடுத்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு எதிராக கோர்ட்டுக்கு போக போகிறேன். யாரோ 2 பேர் சுகத்தை அனுபவிக்க நான் ஏன் பாதிக்கணும்? நான் எதுக்காக உழைத்து சம்பாதிக்கணும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு படுவைரலாகி வருகிறது.
சாமுவேல் கருத்து
"யார்கிட்டயாவது ஏன் குழந்தை பெத்துக்கறீங்கன்னு கேட்டுப் பாருங்க, எங்களுக்கு வேணும், நாங்க பெத்துக்கறோம் என்றுதான் சொல்வார்கள். இப்படி இனப்பெருக்கம் செய்து கொண்டு போவது நாசிசவாதம்" என்பதுதான் சாமுவேலின் ஆழ கருத்தாக உள்ளது.
பாராட்டுகிறேன்
இப்படி உங்களை எதிர்த்து மகன் கோர்ட்டுக்கு போகப் போகிறானே, இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சாமுவேலின் தாயை கேட்டதற்கு, "அவன் துணிச்சலை பாராட்டுகிறேன், நானும், என் கணவரும் ரெண்டு பேருமே வக்கீல்கள்தான்.
தவறை ஏற்கிறோம்
மகனின் சம்மதத்தை எப்படி, எங்கே வாங்கி அவனை பெற்றுக் கொள்வது என கோர்ட்டில் தெளிவாக எடுத்து வாதாடினால், நாங்கள் எங்கள் தவறை ஒப்புக் கொள்கிறோம்" என்றார்.
கவிஞர் கண்ணதாசன்
வழக்கின் விசாரணை, முடிவு என்னாக போகிறதோ தெரியவில்லை.. ஆனால் "நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? இல்லை என் பிள்ளை எனைக்கேட்டு பிறந்தானா.. தெய்வம் செய்த பாவம் இது" என்று நம்ம கவிஞர் கண்ணதாசன் அன்னைக்கே சொல்லிட்டு போய்ட்டார்.